செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டைக்கல் புல்வெளி வளாகத்தில் தமிழக பா.ஜ.க. சார்பில் சர்வதேச யோகா தினவிழா நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகனராஜா தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னிலை வகித்தார்.
மாமல்லபுரம் நகர செயலாளர் தணிகைவேல் வரவேற்றார். இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று சுற்றுலா பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஆட்டோ, கார் டிரைவர்கள், பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்களுடன் பங்கேற்று தடாசனம், ஹலாசனம், சிரசாசனம், வீரபத்ராசனம், ஏகபாதாசனம், சக்ராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களில் யோகாசனம் செய்து அசத்தினார்.

யோகா கலை குறித்து தலைவர் கே.அண்ணாமலை கூறியதாவது:
யோகக்கலை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. யோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள்.
பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்ட பதஞ்சலி யோக சூத்திரம் நூலே யோகக்கலைக்கு அடிப்படையாக அமைந்தது. தினமும் யோகா செய்வதால் உடல் உறுப்புக்கள் பலமடைந்து புத்துணர்ச்சி ஏற்படுவதோடு நோய்கள் வராமல் தடுத்தும் நோய்களின் தீவிரத்தை குறைத்தும் கட்டுக்குள் கொண்டு வருகிறது.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த இந்த யோகக் கலையின் பெருமை உலகம் முழுவதும் பரவச் செய்த பெருமை நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையே சேரும். இவ்வளவு மதிப்பு நிறைந்த யோகக்கலை உலகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று, வருடத்தில் ஒரு நாள் சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27-இல் கோரிக்கையை முன்வைத்து, அதற்காக ஜூன் 21ஆம் நாளை பரிந்துரைத்தார்.

அமெரிக்கா, கனடா, சீனா உட்படப் பல உலக நாடுகள் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஆதரித்து 2014 டிசம்பர் 11அன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21ஆம் நாளை பன்னாட்டு யோகா தினமாக அறிவித்து தீர்மானத்தை நிறைவேற்றியது.
அவரது சீரிய முயற்சியால் வெற்றிகரமாக 9-ஆவது சர்வதேச யோகா தினத்தினை நாம் கொண்டாடி வருகிறோம். அதோடு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கு யோகக்கலையின் பயன்களை உணர்த்தும் வகையில் ஆண்டு தோறும் யோகா தினத்தன்று பல விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
கிராமப்புறங்களில் உள்ள மகப்பேறு பெண்களும் பயனடையும் வகையில் கர்ப்பகாலங்களில் செய்ய வேண்டிய யோகாசனங்களை ministry of ayush மூலம் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக்கியுள்ளார்.
தேசிய ஆரோக்கிய திட்டத்தின் மூலம் 12500 ஆரோக்கிய உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையம் (ayush health and wellness centers ) அனைத்து மாநிலங்களிலும் அமைத்து மக்களுக்கு பயன் பெரும் வகையில் யோகாசனம் பற்றிய அவசியத்தையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இவ்வளவு மதிப்பு மிக்க யோகாசனத்தை தினமும் நாம் பயிற்சி செய்து நம் உடல் மற்றும் ஆரோக்கியத்தை பேணிப்பாதுகாப்போம் என்று சர்வதேச யோகா தினமான இன்று ஜூன் 21 ல் உறுதி மொழி எடுப்போம்.

