பாமக தலைமை நிலையச் செய்தி அறிக்கை:
தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப்புலவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்காக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் ‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ என்ற தலைப்பில் போட்டிமன்றம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதன்படியான முதல் போட்டி தைலாபுரம் தோட்டத்தில் கடந்த மே 21 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
‘‘ தமிழில் பேசு… தங்கக் காசு’’ போட்டிமன்றத்தின் இரண்டாவது போட்டி வரும் மே 28-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11. 00 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறும். இரண்டாவது போட்டிக்கான தலைப்பு ‘ தொலைக்காட்சிகளில் தமிழ்க்கொலை’ என்பதாகும்.
இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஏதேனும் 30 நிமிடங்கள் பார்க்க வேண்டும். அந்த நிகழ்ச்சிகளில் அன்னைத் தமிழ் மொழி எவ்வாறெல்லாம் சிதைக்கப்படுகிறது? எப்படியெல்லாம் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்பது குறித்து 5 நிமிடங்கள் பேச வேண்டும். அவ்வாறு பேசும் போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பிறமொழிச் சொற்களை சுட்டிக்காட்டலாம். ஆனால், அவை தவிர்த்து பிற மொழிச்சொற்களை பயன்படுத்தக்கூடாது.
போட்டியில் பங்கேற்பவர்கள் தாங்கள் பார்த்த தொலைக்காட்சியின் பெயரையோ, நிகழ்ச்சியையோ குறிப்பிடக்கூடாது. நிகழ்ச்சியின் நேரத்தையும், அது எந்த வகையான நிகழ்ச்சி என்பதையும் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
5 மணித்துளிகளுக்கு பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் பேசுவோருக்கு 4 குண்டுமணி ( 4 கிராம்) தங்கக் காசு பரிசாக வழங்கப்படும். அதிக அளவாக 10 பேர் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 9443658621 ( இசக்கி படையாட்சி) என்ற தொலைபேசி எண்ணில் வரும் 27-ஆம் நாள் சனிக்கிழமை வரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன்.

