1947 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 – ஆம் தேதி நம் இந்திய நாட்டிற்கு கிடைத்த சுதந்திரத்தை பற்றிய நினைவுகளை சுதந்திர நினைவுகளாக போற்றுவோம்.
நாம் அனைவரும் எல்லாவற்றிலும் சுதந்திரம் வேண்டுமென நினைப்போம். சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும், சுற்றுலா செல்ல வேண்டும், வாழ வேண்டும் என்று நாம் இன்று நினைக்க 1947 – ஆம் ஆண்டிற்கு முன்பு இந்த பூமியில் வாழ்வதற்கே சுதந்திரம் இல்லாமல் ஆங்கிலேயருக்கு அடிமையாய் வாழ்ந்துள்ளர்கள் நம் இந்தியர்கள்.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகை:
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் மிகவும் வளமாகவும் செல்வ செழிப்பாகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருந்தது தான் நம் இந்திய நாடு. வர்த்தகம் செய்வதற்காகவும் கிறித்தவ மதத்தை பரப்புவதற்காகவும் இந்தியாவில் ஆகஸ்ட் 24 ந் தேதி 1608 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வருகை தந்தார்கள்.
பின் மெதுவாக அவர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தின் விதையை இந்தியாவில் விதைத்தார்கள். ஆங்கிலேயர்களின் பொருளாதாரமும், ஆயுதப் படையும் அவர்களை 1757 ஆம் ஆண்டு இந்தியாவை அடிமைப்படுத்த செய்தது.
இந்தியத் தலைவர்களின் அகிம்சை யுத்தம்:
ஆங்கிலேயர்களின் அடிமையில் இருந்து தப்பித்து இன்று நாம் சுவாசிக்கின்ற சுதந்திர காற்றிற்கு மரங்களாக நின்று பல்வேறு தலைவர்கள் உதவியுள்ளார்கள்.
இன்றைய சுதந்திர தினத்தன்று நமக்காக யுத்தம் செய்து சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவர்களை நினைவில் நிறுத்துவோம்.
மகாத்மா காந்தி:
இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் இவர் இந்தியாவிலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவங்கினார்.
யுத்தம் என்றாலே ஆயுதங்கள் கொண்டு இரு தரப்பிலும் பல இழப்புகளை பெற்று பின்னரே வெற்றி பெறுவார்கள் வீரர்கள். முதன்முதலில் “அகிம்சை யுத்தம்” என்பதை தொடங்கி எந்த ஆயுதங்களும் இல்லாமல் விடுதலையை வெற்றியாக பெற்ற முதல் வீரர் நம் மகாத்மா காந்தி அவர்கள் தான்.
டாக்டர் அம்பேத்கர்:
இந்திய அரசியலமைப்பின் தந்தை என கூறப்படும் இவர் தான் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர். உயர்ந்தோருக்கும் தாழ்ந்தோருக்கும் உள்ள சுவரை உடைத்து அனைவரும் சமம் என தன் சட்டப் புத்தகத்தின் மூலம் அனைவருக்கும் போதித்தார்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத்:
இவர் நம் குடியரசு இந்தியாவின் முதல் ஜனாதிபதியும் பீகார் மாநிலத்தின் முதல் தலைவரும் ஆவார்.
சர்தார் வல்லபாய் பட்டேல்:
இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக சட்ட மறுப்பு இயக்கத்திலும் (civil disobedience movement), இந்தியாவிலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் (Quit India Movement) பெரும் பங்களிப்பை அளித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு:
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவஹர்லால் நேரு 1916 – ஆம் ஆண்டு அன்னி பெசண்ட் தலைமையில் தன்னாட்சி இயக்கத்தில் (Home Rule Movement) பங்கேற்றார். உப்பு சத்யா கிரஹ போராட்டத்திலும் பங்கேற்றார். இவரது லட்சியமே இந்தியா முழு சுதந்திரம் பெற வேண்டும் என்பது தான்.
சுபாஷ் சந்திரபோஸ்:
அனைவராலும் நேதாஜி என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்படும் இவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் தீவிர பிரிவில் சேர்ந்தவர். இவர் ஒரு தீவிர தேசியவாதி ஆவார். நேரு அவர்களை போலவே இவரது லட்சியமும் இந்தியாவின் முழு சுதந்திரம் தான்.
பகத் சிங்:
ஷாஹித் பகத் சிங் என்றழைக்கப்படும் இவர் தீவிர சுதந்திர உணர்வுடைய இந்தியன்.
மங்கள் பாண்டே:
இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக தொடர்ச்சியாக விடாமல் குரல் கொடுத்துள்ளார். அதனால் இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய முதல் போர் வீரர் என போற்றப்படுகிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மன்:
ஆங்கிலேயர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து குரல் குடுத்தவர். இவரை ஆங்கிலேயர்கள் சிறைப்பிடித்து தூக்கிலிட்டனர். ராணி கைந்தின்லியு, பிங்களி வெங்கையா, பகத் கான், லாலா லாஜ்பட் ராய், தாதா பாய் நரோஜி, சேத்ரம் ஜாதவ், பஹாதூர் ஷா ஜாஃபர், அசஃப் அலி, மன்மத் நாத் குப்தா, திருப்பூர் குமரன், சித்தரஞ்சன் தாஸ், ஷ்யாம் ஜி கிருஷ்ணா வர்மா, பால கங்காதர திலக், விநாயக் தாமோதர் சாவர்க்கர் போன்ற எண்ணற்ற தலைவர்களும் இந்திய மக்களும் சுதந்திரத்திற்காக பங்களித்து நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்துள்ளனர்.
இந்திய சுதந்திரமும் வீர மங்கைகளும்:
நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தாலும் பெண்களுக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற கவலை பல பெண்களுக்கு உண்டு. ஆனால் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ளவில்லை. நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் வாழ்ந்த பல பெண்கள் தங்களுக்கு மட்டுமல்ல நாட்டிற்கே சுதந்திரத்தை வீரமுடன் போராடி பெற்று தந்துள்ளனர்.
ராணி லக்ஷ்மி பாய்:
வாரணாசியில் பிறந்து ஜான்சியின் ரானியான இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பெரும் போராட்டம் செய்துள்ளார். பல பெண்களுக்கு தன் உரிமைக்காக போராடுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். 1858 – ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் தன் ராஜ்ஜியத்தை முற்றுகையிட்ட பொழுது தன் கைக் குழந்தையுடன் போருக்கு சென்ற வீர மங்கை இவர்.
சரோஜினி நாயுடு:
‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் இவர் ஒரு சுதந்திர போராளியும், சிறந்த பேச்சாளரும் ஆவார். இவர் “வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக” வாதாடினார்.
பேகம் ஹஜ்ரத் மஹால்:
இவர் இந்தியாவின் முதல் சுதந்திர போரில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவரை கௌரவிப்பதற்காக இந்திய அரசு 1984 – ஆம் ஆண்டு இவருக்காக முத்திரை வெளியிட்டது.
அன்னி பெசண்ட்:
இவர் காங்கிரஸின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார். இவர் 1916 ஆம் ஆண்டு தன்னாட்சி இயக்கத்தை (Indian Home Rule Movement) உருவாக்கியவர். “நியூ இந்தியா” நாளிதழை உருவாக்கியவர்.
இவர்களை போலவே கஸ்தூரி பாய் காந்தி, கமலா நேரு, அருணா அசப் அலி, மேடம் பிகாஜி காமா, விஜயா லக்ஷ்மி பண்டிட் போன்ற பல பெண் வீராங்கனைகள் சுதந்திரத்திற்காக போராடியதை நாம் என்றும் நினைவில் கொள்ளவேண்டும்.
சுதந்திரத்திற்கு முன்பு நம் இந்தியர்களால் எதிலும் உரிமை கொண்டாட முடியாது. அவர்களுக்கு கல்வி கற்க்கும் உரிமையும் கிடையாது. சுதந்திரத்திற்கு பின்னரே இவை அனைத்தும் கிடைத்தது. இருப்பினும் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சற்று பின் தங்கி இருப்பதால் வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கிறது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆசைப்படி வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்கலாமே!……
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்
– கோ. தீபா புவனேஸ்வரி

