”மெடிக்கல் டெஸ்டே எடுக்காமல் நோயை எப்படி குணப்படுத்த முடியாதோ அதே போல் சமூகநோயை குணப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தாக வேண்டும்”
என்று பாமக சார்பில் சென்னையில் நடந்த சாதிவாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி பேசினார்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை அரசு எடுக்க வலியுறுத்தி பாமக சார்பில் சென்னை தி.நகரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த கருத்தரங்களில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி பேசுகையில், ”உண்மையான ஏழைகள் யார் என்பதை கணக்கெடுக்க மத்திய திட்டக்குழு பல விதிகளை வைத்துள்ளார்கள். வருமானம், சொத்து, தினமும் எடுத்துக் கொள்ளும் கலோரிகள் உள்ளிட்டவைகளை வைத்து இதை கணக்கிடுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை உண்மையான ஏழைகள் யார் என்பதை அவர்கள் வசிக்கும் வீட்டை கொண்டு அளவிடலாம்.

மண்சுவர் மற்றும் கூரைவீடுகளில் தங்குபவர்கள் உண்மையான ஏழைகள். 2010 ஆம் ஆண்டில் கலைஞர் முதலமைச்சராக இருக்கும் போது, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கொண்டு வந்தோம். அப்போது தமிழ்நாட்டில் 22 லட்சம் கூரை மற்றும் மண் சுவர் வீடுகள் இருந்தன. அந்த 22 லட்சம் பேரும் மிகமிக ஏழைகள்.
அப்போது சமூகவாரியாக புள்ளிவிவரங்கள் எடுத்ததில், மண்சுவர், கூரை வீடுகளில் வாழும் உயர்சாதியினர் வெறும் 0.7 சதவீதம் மட்டுமே. ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 41.5 சதவீதமும், தாழ்த்தப்பட்டவர்கள் 31.2 சதவீதமும், பிற்படுத்தப்பட்டவர்கள் 23.8 சதவீதமும், பழங்குடியினர் 2 சதவீதமும் இருந்தனர்.
கூரை மற்றும் மண் சுவர் வீடுகளில் வசித்தவர்கள் எண்ணிக்கையை மாவட்டவாரியாக பார்த்தால் விழுப்புரம் மாவட்டம் அதில் முதல் இடத்தில் இருந்தது. அடுத்தபடியாக கடலூர், நாகை, தஞ்சை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், திருவாரூர், திருவள்ளூர் மாவட்டங்கள் இருந்தன. இந்த மாவட்டங்களில் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருந்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும், நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அரசு செயலாளர் பதவிகள், உயர்கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கம்பெனிகளின் போர் உறுப்பினர்கள், இந்தியாவில் உள்ள முன்னணி பத்திரிக்கை நிறுவன ஊழியர்கள், நீதிபதிகளில் அதிகமானோர் உயர்சாதிக்காரர்களே உள்ளனர்.
ஜனநாயகத்தில் வெவ்வேறு சமூகங்களின் பிரதிநிதித்துவம் அவசியமாகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் இதனை அந்தந்த மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அனைத்திற்கும் சர்வே எடுக்கும் மாநில அரசுகள் இதற்கும் சர்வே எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது செல்ஃபி எடுப்பது போன்றதுதான். நமது முகம் அழகாக உள்ளதா, இல்லையா என்பது இதில் தெரியும். மெடிக்கல் டெஸ்டே எடுக்காமல் நோயை எப்படி குணப்படுத்த முடியாதோ அதே போல் சமூகநோயை குணப்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தாக வேண்டும்.
இவ்வாறு அசோக் வர்தன் ஷெட்டி பேசினார்.
டாக்டர் ராமதாஸ் பாராட்டு
இவரது பேச்சை மருத்துவர் ராமதாஸ் மிகவும் ரசித்துக் கேட்டார். கருத்தரங்கில் கலந்து கொண்ட, பார்வையாளர்களிடம் கை தட்டி பாராட்டும் படி கேட்டுக் கொண்டார். ஒரு தடவை அல்ல மூன்று தடவை கைதட்டி பாராட்டி வாழ்த்த சொனனர். ‘’இப்படிப்பட்ட புள்ளி விபரத்தை நமது இயக்கத்தினர் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வக்கில் பாலு, நீங்கள் இவரை அழைத்து மாவட்டம் வாரியாக நம் நிர்வாகிகளுக்கு வகுப்பெடுக்க வேண்டும். அசோக் வர்தன் ஷெட்டி அவர்களுக்கு நன்றி’’ என்று பாராட்டி பேசினார் டாக்டர் ராமதாஸ்.

