TNPSC GROUP 4 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு முன் அதில் தற்போது வனத்துறை தேர்வும் இணைக்கப்பட்டுள்ளது. வனத்துறையில் பணியின் இயல்பினை (Nature of Duty) தெரிந்து கொண்டு பின் வனத்துறை பணியிடங்களுக்கும் சேர்த்து விண்ணபிக்கலாமா? வேண்டாமா? என முடிவெடுப்பது உங்களுக்கு நலம். இதுபற்றிய ஓர் முழுமையான அலசல் ரிப்போர்ட்.
வனக்காப்பாளர் மற்றும்வனக்காவலர்:
பணியின்இயல்பு: (Nature of Duty)
வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் அடிப்படையில் சீருடை (Uniform) அணியும் மற்றும் ஆயுதம் ஏந்தி பாதுகாக்கும் காவல் பணியாகும்.
1. தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதிகள் அடிப்படையாக பீட்களாக (Beat) பிரிக்க பட்டிருக்கும். ஒரு பீட்டின் முழு பொறுப்பு பெற்ற அலுவலராக வனக்காப்பாளர் இருப்பார். அவருக்கு பீட் பாதுகாப்பு பணியில் உதவியாக பணிபுரிய ஒரு வனக்காவலர் இருப்பார். பல பீட்கள் இணைந்தது ஒரு பிரிவு (Section ) இதன் அலுவலர் வனவர் (Forester) ஆவார். பல பிரிவுகள் இணைந்தது ஒரு வனச்சரகம் (Range) ஆகும் இதன் அலுவலர் வனச்சரக அலுவலர் (Forest Ranger) ஆவார். பின் Division, Circle என பிரிக்கப்பட்டுள்ளது.
2. ஒரு வனக்காப்பாளருக்கு குறைந்தபட்சம் 1000 ஹெக்டேர் (2500 ஏக்கர்) முதல் 4000 (10000 ஏக்கர்) ஹெக்டேர் வரை அவரின் பாதுகாப்பு பகுதி இருக்கும்.
3. அவரின் பீட்டில் உள்ள அரசு காப்புக்காட்டில் நடைபெறும் வனக்குற்றங்களை தடுக்கவும், அபராதம் (இணக்க கட்டணம்) விதிக்கவும், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் வனக்காப்பாளர் பொறுப்பானவர்.
4. வனக்குற்றங்கள்:
*வனத்தில் உள்ள மரங்களை வெட்டுதல்
*கள்ள சாராயம் காய்ச்சுதல்
*மணல் கடத்துதல்
*வன விலங்குகளை பொறி வைத்தோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ வேட்டையாடுதல்
*கஞ்சா பயிரிடுதல்
*வனத்தில் நில ஆக்கிரமிப்பு செய்தல்
*வன எல்லையை மாற்றி அமைத்தல்
*வனத்தில் மது அருத்துதல்
*குப்பைகளை கொட்டுதல்
*அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைதல்
*வன விலங்குகளை வனத்தின் உள்ளேயோ அல்லது வெளியேவோ துன்புறுத்துதல் வேட்டையாடுதல்
இன்னும் பல
மேற்கண்ட குற்றங்களை தடுத்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல். இதில் வனக்காப்பாளர் முதன்மையான பணியாக செய்ய வேண்டும். வனக்காவலர் வனக்காப்பாளருக்கு உதவ வேண்டும்.
5. மேலும் தங்கள் பீட் பகுதிக்கு தினசரி சென்று வனத்தினை வனக்காவலர் பணியிடம் நிரப்பப்டவில்லையெனில் தனியாகவோ அல்லது வனக்காவலர் உள்ள போது இணைந்தோ தணிக்கை செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.
6. வருடாந்திர வன விலங்குகள் கணக்கெடுப்பு, மற்றும் தங்கள் பீட் பகுதியில் நடைபெறும் அரசு திட்ட செயலாக்கங்களில் வனவருக்கு உதவியாக பணிபுரிய வேண்டும்.
7. வன விலங்குகளை (யானை, கரடி, புலி, சிறுத்தை, மலைப்பாம்பு, Etc..) வனத்திலிருந்து வெளியேறினால் அதனை மீண்டும் வனத்திற்குள் விரட்டுதல் அல்லது மீட்டு வனப்பகுதிக்குள் விட வேண்டும்.
8. வனத்தில் வன விலங்குகளை நேருக்கு நேர் சந்திக்கும் சூழலும் வரலாம்.
9. சீருடை பணி என்பதால் 24*7 பணி இருக்கும். எந்த நேரமும் வனத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். அரசு விடுமுறைகள் பெரும்பாலும் கிடைக்காது. பண்டிகை நாட்களில் சிறப்பு குழுக்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவீர்கள்.
உடல்தகுதி தேர்வு:
பழங்குடியினர் தவிர்த்து மற்றவர்கள்:
உயரம்
ஆண்கள் – 163 செ.மீ
பெண்கள்- 150 செ.மீ
மார்பளவு
ஆண்கள் – 79 (+5)
பெண்கள் – 74 (+5)
பழங்குடியினர் மற்றும் வனவாழ் பழங்குடியினர்:
உயரம்
ஆண்கள் – 152 செ.மீ
பெண்கள்- 145 செ.மீ
நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் ஆண்கள் 25 கி.மீ (4 மணி நேரம்) , பெண்கள் எனில் 16 கி.மீ (4 மணி நேரம்) நடை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
பதவி உயர்வு
வனக்காவலர் வனக்காப்பாளராகவோ வனக்காப்பாளர் வனக்காவலராகவோ பதவி உயர்வு பெற காலிப்பணியிடங்களை பொறுத்தே பதவி உயர்வு கிடைக்கும்.
தற்போது வனத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்கள் ஏறத்தாழ இளைஞர்களை கொண்டு நிரப்பபட்டு விட்டன. எனவே பதவி உயர்வு காலதாமதம் ஆகலாம்.
எனவே, TNPSC GROUP 4 தேர்வில் வனத்துறையை தேர்ந்தெடுக்கும் முன் பணியின் இயல்புகளை நன்றாக தெரிந்து கொண்டு துறையை தேர்வு செய்யுங்கள். பெண்கள் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து துறையை தேர்வு செய்யுங்கள். ஏனெனில், விருப்பமின்றி துறையை தேர்வு செய்து விட்டு பின் விலகி சென்றால் இன்னொருவருக்கு கிடைக்க வேண்டிய பணி காலதாமதம் ஆகும்.
நம்பிக்கையுடன் தேர்விற்கு தயார் செய்யுங்கள்… வெற்றி நிச்சயம்
குருப் 4 தேர்வு குறித்த முழுமையான ஒரிஜினல் அறிவிக்கையை படிக்க இங்கே கிளிக் செய்யவும் : குருப் 4 தேர்வு அறிவிக்கை 2024

