ஷுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த ஆண்டு பொற்காலமாக அமைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
ஐபிஎல் 2023 போட்டியில் 890 ரன்களைக் குவித்து அதிக ரன் குவித்த வீரர் என்ற விருதையும் பெற்றார். இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் கில்லின் ஆட்டம் எப்படி இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஐசிசிக்கு அளித்த பேட்டியில் ஷுப்மன் கில் குறித்து கோலி பேசியதாவது: அவர் (கில்) விளையாட்டைப் பற்றி என்னிடம் நிறைய பேசுகிறார். கற்றுக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். இந்த வயதில் அவர் அற்புதமான திறமையைக் கொண்டுள்ளார். முக்கிய ஆட்டங்களில் விளையாடக்கூடிய அற்புதமான திறன் மற்றும் தன்னம்பிக்கை அவரிடம் உள்ளது. மரியாதையை அடிப்படையாகக் கொண்ட புரிதல் எங்களிடம் உள்ளது.
அவருடைய வளர்ச்சிக்கு உதவவும் சுய முயற்சியில் அவர் முன்னேறுவதைப் பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன். இதன்மூலம் அவர் நீண்ட காலம் நிலைத்து விளையாடுவதுடன் இந்திய அணிக்கும் அது பயன் தருவதாக அமையும்.
எந்தவொரு மூத்த வீரரின் வேலையும் இளம் வீரர்களை மேம்படுத்த உதவுவதான். கிரிக்கெட் வாழ்க்கை குறித்த நுண்ணறிவை இளம் வீரர்களுக்கு வழங்குவதும் தான் என்று நான் நினைக்கிறேன்.
எந்தவொரு வீரரும் கில்லைப் போல கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும்போது அவர்கள் சிறப்பான நிலையை அடையமுடியும். இந்த டெஸ்ட் ஆட்டத்திலும் கில் தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன் என்றார்.

