பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்ட வாழ்த்து அறிக்கை:
கல்வி மற்றும் தொழிற்புரட்சியின் கதாநாயகன் காமராசரின் 121-ஆம் பிறந்தநாளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க உறுதியேற்போம்!
கல்வியிலும், தொழில்துறையிலும் தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கான அடித்தளத்தை அறுபதாண்டுகளுக்கு முன்பே அமைத்துக் கொடுத்த பெருந்தலைவர் காமராசருக்கு இன்று 121ஆம் பிறந்தநாள். தமிழ்நாட்டை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் வழிநடத்தியதுடன், பிரதமர்களுக்கு எல்லாம் தலைவராக திகழ்ந்தவர் அந்த கர்ம வீரர். அவரது பிறந்தநாளில் அவரது நேர்மையையும், தேசப்பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.
தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் முகம் அவர் தான். எனது வளர்ச்சி அரசியலுக்கான முன்னோடியும் அவர் தான். அவரது வழியில் ஆட்சி நடத்தினால் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறுவதை தடுக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தும் நிலையை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்போம்!

