சேலம் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் இன்று நடந்தது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். துணை மேயர் சாரதா தேவி, துணை ஆணையாளர் அசோக்குமார் மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டத்தில், 34- வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன்இளங்கோ பேசுகையில், “சேலம் மாநகராட்சிக்குள் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும்’ எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற முதல்வரின் திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு குறித்து, கட்டுரை, கடிதம் மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்த வேண்டும்.
அதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாநகராட்சி சார்பாக சான்றிதழ் வழங்க வேண்டும்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு விழா நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்.
இதன் மூலம் மிகப்பெரிய விழிப்புணர்வு மாநகர மக்களிடையே ஏற்படும்” என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் பேசுகையில் 34- வது கோட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக மிகச்சரியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நிதி ஒதுக்கியமைக்கு நன்றி” என்றார்.
“எனது குப்பை எனது பொறுப்பு என்ற முதல்வரின் திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு குறித்து, கட்டுரை, கடிதம் மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்த வேண்டும்” என்ற திட்டத்தை அப்பகுதி மக்கள் வரவேற்று பாராட்டினர்.

