சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடந்தது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கடந்த கால மற்றும் இந்நாள் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை, அறிவு மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்புக்காக நான் பாராட்டுகிறேன்.
இந்தப் பகுதி நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் பிறப்பிடமாக இருந்து வருகிறது. சங்க இலக்கியத்தின் செழுமையான இந்தியாவின் மரபுகள் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும். திருக்குறளில் பொதிந்துள்ள மகத்தான ஞானம் பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது. மாபெரும் பக்திக் கவிதை, மரபு தமிழகத்தில் தொடங்கி, அலைந்து திரிந்த மகான்களால் வடதிசைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தமிழ்நாட்டின் கோயில் கட்டிடக்கலை, சிலைகள் மற்றும் சிற்பங்கள் மனித மேன்மைக்கு புகழ் சேர்க்கின்றன. தங்களிடம் உள்ள அபரிமிதமான வளமான கலாச்சார பாரம்பரியத்தில் பெருமையுடன், இளம் மாணவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் உலகளாவிய அறிவு சமூகத்தின் முக்கிய குடிமக்களாக மாற வேண்டும்.
இப்பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் சுமார் 1,85,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாணவிகள் ஆவர். இன்று தங்கப் பதக்கம் பெற்ற 105 மாணவர்களில் 70 விழுக்காட்டினர் மாணவிகள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னைப் பல்கலைக்கழகம் பாலின சமத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
பெண் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம், நம் நாட்டின் முன்னேற்றத்தில் முதலீடு செய்கிறோம். படித்த பெண்களால் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை வழங்க முடியும், பல்வேறு துறைகளில் தலைமைத்துவத்தை வழங்க முடியும், சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
1857-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உங்கள் பல்கலைக்கழகம் இந்தியாவின் பழமையான நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் அறிவைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இது சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஒரு ஊக்கியாக இருந்து வருகிறது.
அதன் 165 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தில், உங்கள் பல்கலைக்கழகம் உயர்தர கல்வியைப் பின்பற்றி, அறிவார்ந்த ஆர்வத்தையும் விமர்சன சிந்தனையையும் வளர்க்கும் சூழலை வழங்குகிறது. எண்ணற்ற அறிஞர்களையும், தலைவர்களையும், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களையும் உருவாக்கி, கற்றலின் புகலிடமாக அது இருந்து வருகிறது. அவை உலகளாவிய சூழலில் கற்றல் உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உங்கள் பல்கலைக்கழகம் ஒரு கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்டுள்ளது, இந்தியாவின் தென் பிராந்தியத்தில் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் உருவாக்கத்திலும், முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்கள் பல்கலைக்கழகம் ஒரு வளமான வரலாறு மற்றும் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர்கள் ஆறு பேர் இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களாக இருந்து, இன்று நீங்கள் நடந்து செல்லும் அதே நடைபாதைகளில் நடந்தனர் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்.
இப்பல்கலைக்கழகத்தின் எனது முன்னோடிகளான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், திரு.வி.வி.கிரி, திரு. நீலம் சஞ்சீவ ரெட்டி, திரு.ஆர்.வெங்கட்ராமன், திரு.கே.ஆர்.நாராயணன் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோரை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றிய புகழ்பெற்ற சுதந்திரப்போராட்ட வீரர் திரு. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆவார்.
இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் மற்றும் டாக்டர் எஸ்.சந்திரசேகர் ஆகியோர் அறிவியல் உலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.பதஞ்சலி சாஸ்திரி, நீதிபதி கே.சுப்பாராவ் ஆகியோர் நீதித்துறையை வளப்படுத்தியுள்ளனர். உங்கள் பல்கலைக்கழகம் இத்தகைய சிறந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது என்ற எண்ணமே, கற்றல் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் சிறந்து விளங்க பாடுபடச் செய்ய வேண்டும்.
இந்தியாவின் நைட்டிங்கேல் திருமதி சரோஜினி நாயுடு மற்றும் உறுதி மிக்க திருமதி துர்காபாய் தேஷ்முக் ஆகியோரின் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அவர்களும் இப்பல்கலைக்கழக மாணவர்கள்தான். அந்த இரண்டு மகத்தான பெண்களும் தங்கள் காலத்தை விட மிகவும் முன்னேறியிருந்தனர். அவர்கள், பல தலைமுறை இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்த மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் உன்னதமான பெண்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களும், குறிப்பாக மாணவிகள் அவர்களது தனித்துவமான கதைகளிலிருந்து உத்வேகம் பெற வேண்டும்.
கடந்த மாதம், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த முன்னாள் மாணவர்கள் குழுவுடன் உரையாடினேன், அவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு பெரும் நன்கொடை அளித்துள்ளனர். கல்வி மற்றும் சமூக நலனுக்காக பங்களிக்கும் முக்கிய முன்னாள் மாணவர்கள் மற்றும் நன்கொடையாளர்களை சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்தச் சூழலில், சென்னைப் பல்கலைக்கழகத்தை உலகளாவிய சிறப்பு மையமாக முன்னேற்றுவதில் முன்னாள் மாணவர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்க முடியும். பல்கலைக்கழகம் அவர்களின் வெற்றிக்கு பல வழிகளில் பங்களித்துள்ளது, எனவே அவர்கள் தங்கள் தாயக கல்வி நிலையத்திற்கு கைமாறு செய்ய முயற்சிக்க வேண்டும். முன்னாள் மாணவர்கள், இளம் மாணவர்களுக்கு வழிகாட்டலாம். பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்திற்காக முன்னாள் மாணவர்களை அணுகி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.
சென்னைப் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மற்றும் கல்வி சார்ந்த பண்பாட்டை ஊக்குவித்துள்ளது. இது பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளை இயக்கும் திறன் வாய்ந்த மனித வளங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது.
அதிநவீன ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்யவும், துறைகளுக்கு இடையேயான ஆய்வுகளை ஊக்குவிக்கவும், சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் பல்கலைக்கழகத்தை நான் வலியுறுத்துகிறேன். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் நிறுவனமாக இந்த பல்கலைக்கழகத்தை வலுப்படுத்த முடியும். நாடும் உலகமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கற்றல் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சென்னைப் பல்கலைக்கழகம் முன்னணியில் இருக்க வேண்டும்.
நமது இளம் மாணவர்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் எனது இதயத்திற்கு நெருக்கமான ஒரு பிரச்சினையை மீண்டும் வலியுறுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறேன். மிகவும் போட்டி நிறைந்த இன்றைய சூழலில், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நிர்பந்தம், நல்ல நிறுவனங்களில் சேர முடியாது என்ற பயம், மதிப்புமிக்க வேலை கிடைக்காதோ என்ற கவலை, பெற்றோர் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளின் சுமை ஆகியவை நம் இளைஞர்களிடையே கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கவும், ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைவது முக்கியம். எந்த ஒரு பதட்டமும் உங்களை வாட்டி வதைக்க வேண்டாம் என்று அனைத்து மாணவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். எப்போதுமே ஒரு துவக்கம் அல்லது வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது, அது சில தருணங்களில் புலப்படாது. உங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள்.
பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, மாணவர்கள் எதிர்கொள்ளும் பல சவால்களைக் கடந்து செல்ல உதவலாம். மாணவர்கள் தங்கள் அச்சங்கள், கவலைகள் மற்றும் போராட்டங்களை அஞ்சாமல் விவாதிக்க வசதியாக உணரும் இருவழி தகவல்தொடர்புகளை ஊக்குவிக்கும் சூழலை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். சவால்களை நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்வதற்கு நமது இளைஞர்கள் நேசிக்கும், மதிக்கும் அதிகாரமளிக்கப்பட்ட சூழலை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட முயற்சிக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நீங்கள் தொடங்கும்போது, உங்கள் இலக்குகளை உயர்வாக அமைக்குமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், ஆனால் அதே நேரத்தில், உங்கள் இலக்குகளால் நிர்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். உங்கள் கனவுகளை உறுதியுடனும் அச்சமின்றியும் நிறைவேற்ற கடினமாக உழைக்க முயற்சி செய்யுங்கள்.
எனது உரையை நிறைவு செய்ய, மகாகவி சுப்பிரமணிய பாரதியின் காலத்தால் அழியாத சில வரிகளை மேற்கோள் காட்டுகிறேன், அவை எப்போதும் புதிய உத்வேகத்தை ஊட்டுகின்றன.
மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்
வானை யளப்போம் கடல் மீனை யளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்
அதாவது, “வேதம் மற்றும் அறிவியல் இரண்டையும் கற்றுக்கொள்வோம்.
வானம், கடல் இரண்டையும் ஆராய்வோம்
சந்திரனின் மர்மங்களை அவிழ்ப்போம்
எங்கள் தெருக்களையும் சுத்தமாக துடைப்போம்” என்றார்.
இன்று மாலை மகாகவி பாரதியாரை கவுரவிக்கும் விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்கள் வாழ்க்கையிலும் தொழில் அமைப்பிலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் நாட்டிற்கும் மிகவும் பிரகாசமான எதிர்காலத்தை உங்களால் உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். எதிர்காலம் உங்களுக்கே சொந்தம். இந்த செய்தியின் மூலம், உங்கள் அனைவரருக்கும் எனது ஆசிகள்.
நன்றி,
ஜெய் ஹிந்த்!
ஜெய் பாரத்!.

