கர்நாடக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அம்மாநில பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை அறிக்கையாக இன்று வெளியிட்டது. அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா இதனை வெளியிட்டார். அவர் பேசுகையில், ‘’பாஜக ஆட்சி அமையும். மக்கள் நலன் அரசு தொடரும். மோடி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இரட்டை என் ஜின் வேகம் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்’’ என்றார்.
‘’ஏழைகளுக்கு மாதந்தோறும் இலவசமாக 5 கிலோ அரிசி, பருப்பு வழங்கப்படும். வீடற்ற ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள். பட்டியல் இனத்தவருக்கு ரூ.10 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகையாக 5 ஆண்டுக்கு வழங்கப்படும். பழமையான கோயில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம், சட்டவிரோத குடியேறிகளை களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும்’’ என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

