spot_img
More
    முகப்புஆசிரியரின் தேர்வு''வாழ்க்கைப் பாதையில் புயல்வீசினும் தாங்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்களாக..''! கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திரௌபதி...

    ”வாழ்க்கைப் பாதையில் புயல்வீசினும் தாங்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்களாக..”! கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திரௌபதி முர்மு

    ”வாழ்க்கைப் பாதையில் புயல்வீசினும் தாங்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்களாக! உங்களின் பல்கலைக்கழகத்திற்கும், நாட்டிற்கும் நீங்கள் புகழைக் கொண்டு வாருங்கள்” என்று இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக 8-வது பட்டமளிப்பு விழாவில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசினார்.

    பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியதாவது:

    இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக 8-வது பட்டமளிப்பு விழாவில் நான் உங்களுடன் பங்கேற்றிருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று (27.10.2023 ) தங்களின் பட்டங்களைப் பெறுகின்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நமது நாட்டின் மிகப்பெரிய கடல்சார் பல்கலைக்கழகம் என்ற முறையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகமும் அதன் இணைப்பு கல்லூரிகளும் மிகச்சிறந்த நிபுணர்களை, தொழில்முறையாளர்களை, தலைவர்களை உருவாக்கியிருக்கின்றன. இந்த தலைசிறந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் இணைந்துள்ள நீங்கள், தொழில்சார்ந்தவர்களாகவும், திறமைமிக்கவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்களின் பணியும், தலைமைத்துவமும், மதிநுட்பமும் கடல்சார் செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க ஆழ்ந்த பங்களிப்பை செய்திருக்கின்றன என்பதை அறிவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

    “கடலை ஆள்பவர்கள் உலகத்தை ஆள்பவர்கள்”

    தங்கள் முன்னால் தெரிந்த தண்ணீரின் மீது கவனம் செலுத்திய நமது மூதாதையர்கள் காலத்தில் இருந்து எப்போதும் கடலுடனான மனிதகுல உறவு நீடிக்கிறது. மனிதகுல நாகரீகத்தின், மேம்பாட்டில் கடல்களின் பங்களிப்பு கற்பனைக்கும் எட்டாத சிறப்பினைக் கொண்டுள்ளது. பரந்து விரிந்த கடல்நீர் நமக்கு பல கதைகளையும், பாரம்பரியங்களையும், வளங்களையும், தாதுக்களையும் வழங்குகிறது.

    “கடலை ஆள்பவர்கள் உலகத்தை ஆள்பவர்கள்” என்ற பழமொழி உங்களுக்கு பரிச்சயமாக இருக்கும். கடல்களை கட்டுப்படுத்தியவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த உலகத்தையும் அணுகியிருக்கிறார்கள் என்பதை வரலாற்றின் சுருக்கமான வாசிப்பு போதிய அளவு காட்டுகிறது. கண்ட்லாவில் இருந்து கொல்கத்தா வரையிலான துறைமுகங்கள் இந்தியாவிற்குக் கடல்வழிப் பாதைகளைக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்தியாவை உலகின் அனைத்து பகுதிகளுடனும் இணைக்கின்றன.

    தமிழ்நாடு என்பது மாலுமிகளின் பூமி

    சாலைகள் அல்லது விமானங்களுக்கு வெகுகாலம் முன்பாக வணிகம், கலாச்சாரம், மக்கள் மற்றும் சிந்தனைகள் வழக்கமாக கடல்வழியாகவே சென்றுள்ளன. உலகின் மிகத்தொன்மையானவற்றில் ஒன்றாக உள்ள சிந்து பள்ளத்தாக்கு நாகரீகத்தின் துறைமுக நகரமான லோத்தல் கப்பல் கட்டும் துறைமுகம் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது. இது மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கான மணிக்கற்கள், நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றின் வெற்றிகரமான வர்த்தக மையமாக இருந்தது.

    தென்னிந்தியாவின் பல்லவர்கள் சக்திவாய்ந்த கப்பற்படையைக் கொண்டிருந்தார்கள். 10-வது மற்றும் 11-வது நூற்றாண்டுகளில் சோழர்களின் கடல்சார் ஆற்றலும், திறனும் இணையற்றவை. இதன் மூலம் நமது வணிகமும், பாரம்பரியங்களும் தொலைதூரப் பகுதிகளுக்கு பரவின. தமிழ்நாடு என்பது மாலுமிகளின் பூமியாக உள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் தென்னிந்தியா இடையே வர்த்தக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளுக்கு சான்றுகள் உள்ளன. தென்னிந்தியாவின் சோழர்களும், சேரர்களும், பாண்டியர்களும் சுமத்ரா, ஜாவா, மலாய் தீபகற்பம், தாய்லாந்து, சீனா ஆகியவற்றை ஆட்சி செய்தவர்களுடன் கடல்சார் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். முற்காலத்தில் கலிங்கர்கள் என அறியப்பட்ட ஒடிசா மக்களும் கடல் வழியாக தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயணம் செய்துள்ளனர். ஒடிசாவில் தற்போதும் பாலி ஜாத்ராவின் பாரம்பரியம் பிரபலமானது. இது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது.

    மீன் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடு

    இந்தியா 7500 கி.மீ. தூர கடற்கரைப் பகுதியையும், 1382 தீவுகளையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உத்திபூர்வமான முக்கிய கடல்சார் வணிகப்பாதைகள் தவிர, 14,500 கி.மீ. தூரத்திற்கு கடல்சார்ந்த நீர்வழிப்பாதைகளையும் நாம் கொண்டுள்ளோம். நாட்டின் அளவு ரீதியான வணிகத்தில் 95 சதவீதத்தையும், மதிப்பு ரீதியிலான வணிகத்தில் 65 சதவீதத்தையும், கடல்வழிப் போக்குவரத்து மூலம் மேற்கொள்ளப்படும் நிலையில், நாட்டின் கடல்சார் துறை, வணிகத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் மிகமுக்கியப் பங்கினை வகிக்கிறது. கடலோர பொருளாதாரம் 4 மில்லியனுக்கும் அதிகமான மீனவர்களுக்கு வாழ்வளிக்கிறது. சுமார் 2,50,000 மீன்பிடி படகுகளுடன் உலகில் பெருமளவில் மீன் உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.

    அனைத்து வகையிலும் இது ஊக்கமளிப்பதாக இருப்பினும் இந்தத்துறையின் முழுமையான திறனை நாம் பயன்படுத்தி இருந்தால் நாம் வியப்படைந்திருப்போம். முற்காலங்களில் கடல்கடந்து செல்வது நமக்கு மிகவும் எளிதாக இருந்தது. 200 ஆண்டுகால காலனி ஆட்சியின் பிடியிலிருந்து விடுபட்டபின் நாட்டின் மேம்பாட்டில் நாம் கூடுதல் கவனம் செலுத்தினோம். நாட்டின் மேம்பாடும், கடல்சார் மேம்பாடும் பரஸ்பரம் தொடர்புடையவை என்பதை நாம் மறந்துவிட்டோம். உண்மையில் வலுவான கடல்சார் இருப்பை முழுமையாக நிறுவுவதற்கான பொருளாதார மற்றும் தொழில்துறை ஆதாரங்களிலும் நாம் பின்தங்கிவிட்டோம்.

    20 நாடுகளில் இந்தியா இடம்பெறவில்லை

    இந்தத்துறையின் ஆற்றலை நாம் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு முன் பல சவால்களை நாம் கடக்கவேண்டியுள்ளது. உதாரணமாக ஆழக்கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமான சரக்குப் பெட்டக கப்பல்களை அருகில் உள்ள பிற துறைமுகங்களுக்கு திருப்பி விட வேண்டியுள்ளது. வணிக மற்றும் பயணக்கப்பல் கட்டுமான தொழில்துறையில் திறன், பயன்பாடு மற்றும் போட்டித்தன்மையின் மிக உயர்ந்த தரங்களுக்கு நாம் இலக்கு நிர்ணயிக்கும் அவசியம் உள்ளது. இந்தியத் துறைமுகங்களின் செயல்திறன் மற்றும் வந்துசெல்லும் நேரத்தை உலகளாவிய சராசரிக் குறியீடுகளுடன் பொருத்த வேண்டிய அவசியம் உள்ளது. வருடாந்திர கப்பல் போக்குவரத்தில் முதன்மையில் உள்ள 20 நாடுகளில் இந்தியா இடம்பெறவில்லை. உலகளவில் 50 மிகச்சிறந்த சரக்கு கப்பல் துறைமுகங்களில் நாம் இரண்டினை மட்டுமே பெற்றிருக்கிறோம். இந்தியத் துறைமுகங்கள் அடுத்தநிலைக்கு செல்வதற்கு முன் அடிப்படை கட்டமைப்பு மற்றும் செயல்பாடு சவால்களை சரிசெய்ய வேண்டும். பெரும்பாலான நமது மீன்பிடி படகுகள் எந்திரமயமாக்கப்பட வேண்டியுள்ளது.

    இந்தச்சூழலில் சாகர்மாலா திட்டம், “துறைமுக மேம்பாடு” என்பதிலிருந்து “துறைமுகம் மூலமான மேம்பாடு” என்பதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். துறைமுக நவீனமயம், துறைமுகங்களுக்கிடையே தொடர்பு, துறைமுகம் மூலமான தொழில்மயம், கடலோர சமூக மேம்பாடு, கடலோர கப்பல் போக்குவரத்து அல்லது உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து என்பவை சாகர்மாலா முன்வைத்துள்ள “துறைமுகம் மூலமான மேம்பாடு” என்பதன் ஐந்து தூண்களாகும்.

    புதுமைப் பயணம்

    இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற மூன்றாவது உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாடு ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. இது ‘அமிர்தகால தொலைநோக்குப் பார்வை 2047’-ஐ சாதிப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் ‘வளத்திற்கான துறைமுகங்கள் மற்றும் வளர்ச்சிக்கான துறைமுகங்கள்’ என்ற தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

    இந்தியாவும், இந்தியர்களும் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களை, உலகளாவிய துறைமுகங்களை மற்றும் மையங்களை நிர்வகிப்பவர்களாகவும், கப்பல்களை செலுத்துபவர்களாகவும் மட்டுமில்லாமல் உலகளாவிய பொருளாதாரத்தை இயக்குபவர்களாகவும், வழிநடத்துவோராகவும் உள்ளனர். நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து, நாம் தற்போது ‘சமுத்திரயான்’ திட்டத்திற்குத் தயாராகி வருகிறோம். இது 6,000 மீட்டர் ஆழ்கடல் நீரில் உள்ள ஆதார வளங்களையும், பல்லுயிர் பெருக்கத்தையும் மதிப்பீடு செய்வதற்கான புதுமைப் பயணமாகும்.

    புதுமையான நடைமுறை

    வெப்பநிலை உயர்வு மற்றும் கடல்மட்ட உயர்வு உள்ளிட்ட பருவநிலை பிரச்சனை நமது காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது வாழ்வாதாரங்களை குறிப்பாக நலிந்த சமூகங்களை பாதிக்கின்ற பருவநிலை மாற்றத்தை குறைப்பதும், செயலூக்கமுள்ள விரைவான தீர்வினை எட்டுவதும் கடல்சார் துறைக்கு அவசியமானதாகும்.

    பட்டம் பெறுவது ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது. கற்பவர் என்பதில் இருந்து நடைமுறைப்படுத்துகின்றவர் என்ற மாற்றத்தை இது குறிக்கிறது. இவர்கள் பெரிய சவால்களை ஏற்றுகொண்டு நாட்டிற்கும், சமூகத்திற்குமான மிகப்பெரும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளனர். நீங்கள் தொழில்முறை சார்ந்த பொறுப்பைக் கொண்டிருப்பது மட்டுமின்றி சுற்றுச்சூழல் மற்றும் சூழல்முறையின் நலனுக்கு பொறுப்பானவர்களாக இருக்கிறீர்கள். கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட நீடிக்கவல்ல, திறன்மிக்க கடல்சார் செயல்பாடுகள் இந்தக் காலகட்டத்தின் தேவை ஆகும். ஆரோக்கியமான சூழல் அமைப்புக்கு கடலில் மிகவும் நெகிழ்வான, புதுமையான நடைமுறைகளும் அவசியமாக உள்ளன.

    ஒளிரும் திறனைப் பெற்றுள்ளது

    மத்தியப் பல்கலைக்கழகங்களில் மிகவும் இளமையானதாக இருப்பினும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அதன் சிறப்பை நிரூபித்துள்ளது. கூடுதல் செயல்பாடுகளுக்கான திறனையும், பிரிவுகளையும், துறைகளையும் கொண்டுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் கடல்சார் துறையுடன் தொடர்புடைய அனைத்து நிலைகளிலும் கலங்கரை விளக்கமாகவும் மாறவிருக்கிறது. கடல்சார் சட்டம், கடல் நிர்வாகம், கடல் சார் அறிவியல் போன்ற தொடர்புடைய துறைகளில் தனது நிபுணத்துவத்தை விரிவுபடுத்தும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் கடல்சார் கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, கல்விசார் பங்களிப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் உலகளாவிய சிறப்பு மையமாக ஒளிரும் திறனைப் பெற்றுள்ளது.

    மற்ற பிற தொழில்களில் உங்களைப் போன்ற வயதுடையவர்களிடம் எதிர்பார்ப்பதை விட, மிக உயர்ந்த பொறுப்பினை ஏற்பதற்கு நீங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். சவாலான சூழல்களில் பெரும்பாலும் இருக்கின்ற உங்களின் அணி உறுப்பினர்களுக்கு வழிகாட்ட தேவையான தலைமைத்துவ பண்புகளை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். கடல் வணிக அதிகாரி என்ற முறையில் வீட்டில் இருந்து பல மாத காலம் வெளியிடங்களில் செலவிடுவது, கடல் பயணத்தில் மற்ற ஊழியர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற தொழில்சார்ந்த தேவைகளுக்கு இணங்க செயல்படும் சிறப்பு தன்மைகளை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஏற்கனவே நீங்கள் இத்தகைய பண்புகளை கொண்டிருக்கிறீர்கள் என்றும் உங்களின் பணிகளை மேற்கொள்ள முழுமையான திறன் பெற்றிருக்கிறீர்கள் என்றும் நான் நம்புகிறேன்.

    பட்டம் பெற்றிருப்போருக்கும், தங்கப்பதக்கம் பெற்றிருப்போருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துக்களை நான் உரித்தாக்குகிறேன். உங்கள் வாழ்க்கைப் பாதையில் புயல்வீசினும் தாங்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்களாக! உங்களின் பல்கலைக்கழகத்திற்கும், நாட்டிற்கும் நீங்கள் புகழைக் கொண்டு வாருங்கள்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments