ராணிப்பேட்டை கலெக்டராக பொறுப்பேற்ற பிரியா, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களை ஒரு மாதத்தில் தீர்வு காண வேண்டும் என்று புதிய கலெக்டர் பிரியா, துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பிரியாவை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது அதனை தொடர்ந்து அவர் ராணிப்பேட்டைக்கு வந்து தனது அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் அங்குள்ள கூட்டரங்கில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
சேலத்தை சேர்ந்த அவர் கடந்த 2003-ல் தமிழ்நாடு அரசு குரூப் -1 தேர்வு எழுதி வெற்றி பெற்று தீயணைப்பு துறையில் முதல் பெண் அலுவலர் என்ற பெருமையுடன் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவர் சென்னை எழிலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது உயிரை பனையம் வைத்து துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு பலரை காப்பாற்றிய அவரது செயல் எல்லோராலும் பாராட்டப்பட்டது. மேலும், இந்திய அரசு, குடியரசுத் தலைவரின் வீரத் தங்கம், மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா பதக்கக்கங்களை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் இந்திய ஆட்சிப்பணி முதுநிலை பட்டியலில் பதவி உயர்வு பெற்ற அவர் செங்கல்பட்டில் பயிற்சியை அடுத்து சிவகாசி சப்-கலெக்டராகவும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு வாரிய இயக்குனராக பணியாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட கலெட்க்டர் பிரியா ரவிசந்திரன் பேசுகையில், ‘’பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மனுக்கள் ஒவ்வொன்றையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொறுப்புடன் படித்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

