’’ஊரில் உள்ள குற்றவாளிகளை எல்லாம் தேடித்தேடி அமைச்சராக்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?” என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினா நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
நேற்று நள்ளிரவு வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இன்று எங்கே கொலை நடந்துள்ளது எந்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்ற அச்சத்திலேயே பொழுது விடிவது தான் தவெகவின் மாற்று அரசியலா? தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்கள் நிர்வாகத்தின் அடிப்படையைக் கற்றுக்கொள்ள இன்னும் எத்தனை உயிர்களைக் காவு கொடுக்க வேண்டும்?
தேர்தலின் போது, சீர்குலைந்து கிடந்த சட்டம் ஒழுங்கைப் பற்றி கடுமையாக விமர்சித்த ஜோசப் விஜய், தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலில் அதைத் தானே சரி செய்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு ஊரில் உள்ள குற்றவாளிகளை எல்லாம் தேடித்தேடி அமைச்சராக்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்?

