சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இதில், 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு கொடுக்கப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திரு.வி.க.நகர் (எண் 5) மற்றும் ராயபுரம் (எண் 6) மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியும் தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வெள்ளியன்று (ஜூன் 30) மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
அப்போது, நேரமில்லா நேரத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், “5, 6ஆவது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியார்மயமாக்க ஜூன் 16ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர் களில் பெரும்பான்மையோர் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுக நிர்வாக சீர்கேடு காரணமாகவும், 2016-21 தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளே முடிவு செய்து மேலும் 8 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் அன்றைய ஆணை யரை சந்தித்து மனு அளித்தனர். அதற்கு மாறாக, தேர்ந்தெடுக்கப் பட்ட மாநகராட்சி நிர்வாகம் அதிமுக வழியில் செல்வது சரியல்ல. தனியார் முதலாளிகளுக்கு லாபம்தான் முக்கியம்.
சேவை மனப்பான்மையோடு செயல்பட மாட்டார்கள். தற்போதுள்ள ஊழியர்கள் 500 மீட்டர் தூரம் பெருக்க வேண்டும், 250 வீடுகளில் குப்பை அள்ள வேண்டும் என்று பணிவிதி உள்ளது. தனியார் நிறுவனங்கள், ஒரு ஊழியர் 5 தெருவை (சுமார் 1500 மீட்டர்) சுத்தம் செய்ய வேண்டும் என்று விதி வைத்துள்ளன; தேவையான ஊழியர்களையும் நியமிப்பதில்லை. எனவே, குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்க கூடாது” என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “தூய்மைப் பணியை தனி யாருக்கு கொடுப்பது அரசின் கொள்கை முடிவு. தற்போது பணி யில் இருக்கும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் பிற மண்டலங் களுக்கு பணிமாறுதல் செய்யப்படு வார்கள். என்யுஎல்எம் தொழி லாளர்களை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனமே பணிக்கு எடுத்துக் கொள்ளும். இதனால் தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை” என்றார்.
மேயரின் பதிலை ஏற்க மறுத்து சிபிஎம் உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், ப.விமலா, எம்.சரஸ்வதி, ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் எழுந்து நின்று பேசினர். அப்போது குறுக்கிட்ட ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், “கருத்துக்கேட்பு கூட்டத்தில் வந்த கருத்துக்கள், உறுப்பினர்களின் ஆட்சேபணைகள் ஆகியவை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றார். இவற்றை ஏற்க மறுத்து சிபிஎம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜெயராமன், “6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவு ஊழியர்கள் பணிபுரிந்த மாநகராட்சியில் தற்போது 2 ஆயிரம் பேர்தான் உள்ளனர். துப்புரவு பணி தனியார்மயமானால் புதிய பணியிடங்கள் உருவாகாது. ஒரு நிரந்தர ஊழியரின் ஊதியத்தை எடுத்து 5 பேருக்கு பிரித்து கொடுக்கும் தனியார்மயம் தேவைதானா? ஒப்பந்த ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய மறுக்கின்றனர். தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி துப்புரவு பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்” என்றார்.
முன்னதாக மன்ற கூட்டத்திற்கு வருகை தந்த மேயர், துணை மேயர், மண்டலக்குழுத் தலை வர்கள், கவுன்சிலர்களிடம் தனியார்மயத்தை கைவிட வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க (சிஐடியு) தலைவர்கள் மனுக்களை அளித்தனர். இதன்பிறகு ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

