Madras Murasu

கீமோதெரபி சிகிச்சைக்கு மாற்றாக மேம்பட்ட மருந்து..! அராய்ச்சி தகவல்

புற்றுநோய் செல்களுக்குள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய மேம்பட்ட புற்றுநோய் மருந்து, வழக்கமான கீமோதெரபி மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கீமோதெரபி சிகிச்சை முறை பல்வேறு சமயங்களில், ஆரோக்கியமான செல்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது, பாதிக்கப்பட்டுள்ள செல்களுடன் ஆரோக்கியமான செல்களும் பெரும்பாலும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இதன் காரணமாக, குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, புற்றுநோய்க்கான மருந்து உடலுக்குள் செலுத்தப்படும்போது, சாதாரண திசுக்களில் செயலற்ற நிலையில் இருந்து, கட்டி உள்ள இடங்களில் மட்டும் குறிப்பாகச் செயல்படக்கூடிய வகையில், இலக்கை மையமாகக் கொண்ட சிகிச்சை முறைகள் அவசியமாகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டனர். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர் ஆய்வு நிறுவனம்’ (IASST)-ஐச் சேர்ந்த டாக்டர் ஆசிஸ் பாலா, குவாஹாட்டி இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.பி. பாபக் ஆகியோர் தலைமையில் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், ‘ஆர்கே-251’ (RK-251) எனப்படும் புதிய மேம்பட்ட புற்றுநோய் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து முக்கியமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள செல்களில் மட்டுமே செயல்படும் வகையிலும், ஆரோக்கியமான செல்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல், கெமிஸ்ட்ரி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புற்றுநோய் செல்கள் பெரும்பாலும் அதிக அளவில் வினைத்திறன் மிக்க ஆக்சிஜன் இனங்களை (ROS) உற்பத்தி செய்கின்றன, இவை தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளாகும். RK-251 ஒரு புற்றுநோய் செல்லுக்குள் நுழையும்போது, ​​அங்குள்ள அதிகப்படியான ROS அளவுகள் மருந்தின் செயல்பாட்டைத் தூண்டி, “NBDHEX” எனப்படும் ஒரு சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்புச் சேர்மத்தை வெளியிடுகின்றன. இந்தச் சேர்மம், பல புற்றுநோய் செல்கள் உயிர்வாழவும் சிகிச்சையை எதிர்க்கவும் பயன்படுத்தும் இலக்குப் புரதங்களைத் தடுக்கிறது.

மருத்துவத்திற்கு முந்தைய ஆய்வுகளில், RK-251 தீவிரமான டிரிபிள்-நெகட்டிவ் மார்பகப் புற்றுநோய் செல்களுக்கு எதிராக வலுவான செயல்பாட்டைக் காட்டியது, ஆனால் ஆரோக்கியமான செல்களில் மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தியது.

ஜீப்ராஃபிஷ் கருக்களில் (Danio rerio) உருவாக்கப்பட்ட இந்த மருந்து குறித்த நடத்தை ஆய்வும், நச்சுத்தன்மையின் வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டவில்லை. மேலும், வினைத்திறன் மிக்க ஆக்சிஜன் இனங்கள் (ROS) முன்னிலையில் விரும்பிய ஒளிர்தலை வெளிப்படுத்தியது. இது, இந்த மருந்து மேலதிக ஆராய்ச்சி மற்றும் சரிபார்ப்புக்குப் பாதுகாப்பானதாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தை நோயாளிகளிடம் பரிசோதிப்பதற்கு முன்பு மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இந்த ஆய்வு ACS- ஜர்னல் ஆஃப் மெடிசினல் கெமிஸ்ட்ரி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Scroll to Top