இதன்படி, மாணவர் சேர்க்கை, மொத்த சேர்க்கை விகிதம், ஆசிரியர்கள் எண்ணிக்கை, மாணவர்-ஆசிரியர் விகிதம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், இடைநிற்றல் விகிதமும் குறைந்துள்ளது. டிஜிட்டல் வசதிகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பு, பெண் ஆசிரியர்களின் பங்கேற்பு, பாலின சமத்துவம், சமூக உள்ளடக்கம், அனைவருக்கும் கல்வி ஆகியவற்றிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் கீழ் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடலுக்கு வலுசேர்க்கிறது.
பள்ளிக் கல்வி குறித்த விரிவான தரவுகளை சேகரித்து நிர்வகிப்பதற்காக பள்ளிக் கல்வி எழுத்தறிவுத் துறையால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளமாக ஒருங்கிணைந்த மாவட்ட கல்வித் தகவல் அமைப்பு பிளஸ் (யுடிஐஎஸ்இ+) செயல்படுகிறது. 2018-19-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து கல்வி சார்ந்த திட்டமிடல், கொள்கை உருவாக்கம், முன்னேற்றங்களைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கு இது ஆதரவளித்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் செயல்பாட்டை கண்காணிப்பதற்கான முக்கிய தரவுக் களஞ்சியமாகவும் இது விளங்குகிறது.

2025-26-ம் ஆண்டில் பள்ளிக் கல்வி அமைப்பில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 7 ஆசிரியர்கள், 169 மாணவர்கள் உள்ளனர். ஒட்டுமொத்த மாணவர்-ஆசிரியர் விகிதம் 24:1 ஆக உள்ளது. தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ள 30:1 என்ற அளவைவிட இது மேம்பட்ட நிலையாகும். இடைநிலைக் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 71.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒரே ஆசிரியர் பணியாற்றும் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 3 சதவீதம் குறைந்து 1,00,843 ஆக உள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையும் 29 சதவீதம் குறைந்து 5,663-ஆக உள்ளது. மாணவர் சேர்க்கையில் மானவிகள் 48.4 சதவீதமாக உள்ளனர். பெண் ஆசிரியர்கள் 54.9 சதவீதமாக உள்ளனர். மாணவர் சேர்க்கையில் சமூகப் பிரிவுகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 44.9 சதவீதம், பொதுப்பிரிவினர் 27.5 சதவீதம், பட்டியலினத்தவர் 17.7 சதவீதம், பழங்குடியினர் 10 சதவீதம் என உள்ளனர். பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் இணைந்து மொத்த சேர்க்கையில் 27.7 சதவீதமாக உள்ளனர்.

பள்ளிகளின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கணினி வசதி கொண்ட பள்ளிகள் 69.9 சதவீதமாகவும், இணைய வசதி கொண்ட பள்ளிகள் 67.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன. 95 சதவீத பள்ளிகளில் மின்சார வசதி, 99.5 சதவீத பள்ளிகளில் பாதுகாப்பான குடிநீர், 98.5 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறை வசதி, 97.2 சதவீத பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி, 96.9 சதவீத பள்ளிகளில் கைகழுவும் வசதி, 90.5 சதவீத பள்ளிகளில் நூலக வசதியும் உள்ளது. மழைநீர் சேகரிப்பு வசதி 29.9 சதவீத பள்ளிகளிலும், கைப்பிடியுடன் கூடிய சாய்வுதள நடைபாதை வசதி 58.2 சதவீத பள்ளிகளிலும் உள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2025-26-ம் ஆண்டுக்கான அறிக்கை பள்ளிக் கல்வியில் அணுகல், சமத்துவம், தரம், சமூக உள்ளடக்கம், டிஜிட்டல் தயார்நிலை, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை எடுத்துரைக்கிறது. தேசிய அளவிலான விரிவான தரவுத் தளமாக ஒருங்கிணைந்த மாவட்ட கல்வித் தகவல் அமைப்பு பிளஸ் செயல்படுவதன் மூலம் ஆதாரங்களின் அடிப்படையிலான திட்டமிடல், கொள்கை உருவாக்கம், கல்வித் துறையின் முன்னேற்றங்கள் கண்காணிப்பு ஆகியவை வலுப்பெறுகின்றன. சமத்துவமான, அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி அமைப்பை உருவாக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் நோக்கத்தையும் முன்னேற்றத்தையும் இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
