தூத்துக்குடி துறைமுக கடற்கரைக்கு அருகில் உள்ள கடல் வழியே 18.05.2023 அன்று இரவு இலங்கைக்கு ஒரு கும்பல் திமிங்கல எச்சத்தை இந்தியாவிலிருந்து கடத்த முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், டிஆர்ஐ அதிகாரிகள் ஐந்து பேருடன் வந்த ஒரு வாகனத்தை மறித்துள்ளனர். வாகனத்தின் முன் இருக்கையில் இருந்து 18.1 கிலோ திமிங்கல எச்சம் மீட்கப்பட்டது. கடத்தல் முயற்சியை அங்கிருந்தவர்கள் ஒப்புக்கொண்டனர்.
திமிங்கல எச்சம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 அட்டவணை II-ன் கீழ் பட்டியலிடப்பட்ட ஒரு பாதுகாக்கப்பட்ட பொருளாகும். இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்துடன் திமிங்கல எச்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இத்தகைய கடத்தல் முயற்சிகளில் இருந்து தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பாதுகாக்கவும், பாதுகாக்கவும் டிஆர்ஐ கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், தூத்துக்குடி கடற்கரையில் இருந்து கடத்த முயன்ற சுமார் 40.52 கிலோ திமிங்கல எச்சத்தை டிஆர்ஐ பறிமுதல் செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 54 கோடி ரூபாய் ஆகும். இந்த திமிங்கல எச்சம் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
திமிங்கலம் எச்சம் என்றால் என்ன?
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கடலில் அலைகளால் கரைத்து அடித்து வரும்போது திமிங்கலத்தின் வயிற்றில் இயற்கையாகவே அம்பர்கிரிஸ் எனும் திரவம் சுரக்கிறது. இந்த திரவம் உருண்டையாக வடிவெடுக்கிறது. இந்த எச்சம் திமிங்கலம் தனது வாயில் இருந்து வாந்தியெடுக்கிறது. இவ்வாறு திமிக்கலம் போடும் எச்சம் அல்லது வாந்திக்கு அம்பர் கிரிஸ் என அழைக்கப்படுகிறது.
இதனை நெருப்பினால் சூடு காட்டினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். அதனால், கடலில் உள்ள திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் இந்த திரவமானது கள்ளச்சந்தைகளில் பல்வேறு வாசனை திரவியம் மற்றும் பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. அதனால், கள்ளச்சந்தைகளில் கடத்தல்காரர்கள் மத்தியில் திமிங்கலத்தின் திரவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது” என்றார்.

