அமெரிக்காவில் மூன்று நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி சான்பிரான்சிஸ்கோ வந்தடைந்தார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-
“இந்திய ஒற்றுமை யாத்திரையை தடுக்க பாஜக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவையெல்லாம் என்னை முன்னோக்கி செல்லவே வைத்தது.

இந்தியர்களுக்கு வெறுப்பு அரசியல் மீது நம்பிக்கை இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் தான் பரப்புகிறார்கள். பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
இன்று, இந்தியாவில் ஏழைகளும் சிறுபான்மையினரும் உதவியற்று நிற்கின்றனர். இந்தியர்கள் எப்போதும் ஒருவரையொருவர் வெறுப்பதை விரும்ப மாட்டார்கள். ஊடகங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சிறிய கூட்டம் தான் வெறுப்பை பரப்பி விடுகிறது.

நீங்கள் முஸ்லீம்கள் எப்படி தாக்கப்படுவதாக உணர்கின்றீர்களோ, அப்படித்தான் சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள், தலித்துகள், பழங்குடியினரும் உணர்கிறார்கள். 1980-களில் தலித்துகளுக்கு என்ன நடந்ததோ அதுவே இன்று இந்தியாவில் முஸ்லீம்களுக்கு நடக்கிறது.
பிரதமர் மோடி அருகில் கடவுள் அமர்ந்தால் பிரபஞ்சம் எப்படி உருவானது என அவருக்கே கற்றுக் கொடுப்பார். தனக்கு தான் எல்லாம் தெரியும் என இந்தியாவில் ஒரு கூட்டம் நம்பிக்கொண்டிருக்கிறது. பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அரசியல் சாசனத்தை தாக்கி வருகிறது. சாதி மற்றும் மத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவையெல்லாம் என்னை முன்னோக்கி செல்லவே வைத்தது. ஒரு வேளை உங்களுக்கு கோபம், வெறுப்பு, கர்வம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருந்திருந்தால், நீங்கள் பாஜக கூட்டத்தில் இருந்திருப்பீர்கள்.
பதவி நீக்கம் தண்டனை குறித்து நான் நினைத்து பார்க்கவே இல்லை. அந்த தண்டனை என்னை மக்களிடம் கொண்டு சென்றது. நிறைய கற்றுக் கொடுத்தது” என்று ராகுல்காந்தி கூறினார்.

