அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை:
“பெண்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் உண்மையான பெண் சுதந்திரம் ஆகாது. நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்தார்.
பின்னர், அதையே 2016 ல் 50% இடஒதுக்கீடாக உயர்த்தி வழங்கி பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர். அதேபோல் 1991ல் முதன்முதலாக ஆட்சி அமைத்த போதுதான் 31 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், ஜெயலலிதாவுடன் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது அதிமுக மட்டும் தான். அதனை முன்மாதிரியாக கொண்டு நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதற்கும் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.