தமிழ்நாடு நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூக வலைதளங்களில் ’தமிழ்நாடு நாள்’ வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம் வருமாறு:
‘தமிழ்நாடு’ – சொல் அல்ல; தமிழரின் உயிர்!
பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே!
1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மாநிலங்கள் தோன்றின. ஆனால், நம் தாய் நிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் பெற இன்னும் பதினொரு ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று!
1967-இல் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியான தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நிலத்தின் பெருமகன் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார்; 1967 ஜூலை 18-இல் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டினோம்!
மறைமலை அடிகள், தந்தை பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி என இந்தப் போராட்டத்தின் வேர் மிக ஆழமானது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்!
தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

