”ஆப்கானிஸ்தான் அரசின் நிலைப்பாடு அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத் தன்மை கொண்ட அமைப்பை நடத்துவதற்கான ஐசிசியின் நோக்கங்களுக்கு எதிராக உள்ளது” என்று பார்க்லே தெரிவித்தார். ”மகளிர் கிரிக்கெட் தொடர்பான ஆப்கானிஸ்தான் சட்டங்களை எங்களால் மாற்ற முடியாது” என்று ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார்.
ஐசிசியின் வருடாந்திர பொதுக் கூட்டம் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வியாழக் கிழமை முடிவுற்றது. கூட்டத்தில் ஐசிசி போட்டிகளில் மகளிர் அணிகளுக்குச் சம அளவில் பரிசுத் தொகை வழங்கப்படுவது, ஐசிசியின் நிதிப் பங்கீடு உள்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட்டை திரும்பக் கொண்டு வருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே, ஐசிசி தலைமை செயல் நிர்வாகி ஜெஃப் அலார்டைஸ் இருவரும் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளித்தனர். அப்போது ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் கடினமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று தெரிவித்த கிரெக் பார்க்லே, “ஆப்கானிஸ்தான் அரசின் நிலைப்பாடு அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத் தன்மை கொண்ட அமைப்பை நடத்துவதற்கான ஐசிசியின் நோக்கங்களுக்கு எதிராக உள்ளது. மகளிர் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கும் விளையாடுவதற்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.” என்றார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் சட்டங்களைத் ஐசிசியால் மாற்ற முடியாது என்று தெரிவித்த ஐசிசி தலைவர், “ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட்டை மீட்டெடுப்பதற்கு ஐசிசியால் என்ன செய்ய முடியும் என்பதைப் பரிசீலிக்கிறோம். இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் வலியுறுத்துவோம்.” என்றார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மகளிர் கிரிக்கெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.

