நம்மில் பலருக்கு உணவு உண்டபின் ஏவ்வ்… என்று சத்தமாக ஏப்பம் ஏற்படும். இதனால் அருகில் உள்ளவர்கள் நம்மை சங்கடமாக திரும்பிப் பார்க்க கூடும். சிலருக்கு நாம் செய்யும் செயல் தொந்தரவாக கூட இருக்க வாய்ப்புண்டு. நாம் ஒவ்வொரு முறை உணவை உட்கொள்ளும் போதும் உணவுடன் சேர்த்து காற்றையும் விழுங்கி விடுகிறோம் அதன் வெளிப்பாடே ஏப்பம்.
எப்பொழுதாவது வரும் ஏப்பம் இயல்புதான். ஆனால், அடிக்கடி வரும் ஏப்பம் பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஏப்பத்தை எப்படி தடுக்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
உண்ணும் உணவை சரியாக மெல்லாமல் வேகமாக உட்கொள்ளும் பொழுது, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை அருந்தும் பொழுது, நாம் தண்ணீர் பருகும் போது, அலுவலகங்களுக்கு செல்வோர் ஒரு இடத்தில் உட்காராமல் அவசரமாக உண்ணும் பொழுது, சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் தாமதமாக இரவில் உட்கொள்ளுதல், மசாலா சேர்த்த உணவுகள் போன்றவற்றால் ஏப்பம் உருவாகிறது .
இவை உடலில் உள்ள இரைப்பையின் அமிலத்தன்மையை அதிகரித்து நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பத்தை உருவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கிறது ஏப்பம்.
ஏப்பத்தை குறைக்கும் சில உணவுகள்:
ஏப்பம் ஏற்படுவதை தடுக்க அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும்.
நம் சமையலறையில் இருக்கும் பொருட்களான இஞ்சி ,சீரகம், சோம்பு, பூண்டு, பெருங்காயம் போன்றவைகளை உணவில் சமைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
பெருங்காயத்தை சூடான தண்ணீரில் கலந்து சாப்பிடும் முன் குடித்து வந்தால் பல வயிற்று பிரச்சனைகளையும், ஏப்பத்தையும் குணமாக்கலாம்.
உணவில் பூண்டு சேர்த்து சமைப்பது வாயு பிரச்சனைகளை போக்கும்.
நாம் உண்ணும் தயிரில் நன்மை வாய்ந்த சில பாக்டீரியாக்கள் இருப்பதால் இவையையும் நாம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் சாப்பிடும் பொழுது நாம் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கார்பனேற்றம் நிறைந்த பானங்களுக்கு பதிலாக பப்பாளி, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழச்சாறுகளை பருகலாம்.
பலருக்கு டீ இல்லாமல் தினசரி வாழ்க்கை இல்லை. டீ குடிப்பவர்கள் வாயு கலந்த உணவை உட்கொள்ளும் போதெல்லாம் ஏலக்காய் கலந்த டீயை பருகலாம். இது செரிமான பிரச்சினையை போக்கும் மேலும்
புதினா இலையுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பருகி வர ஏப்பம் வருவதை நாம் கட்டுப்படுத்தலாம்.
– தே. சுகன்யா

