தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வருகிறது. 132 இடங்களில் காங்கிரசும், 66 இடங்களில் பாஜகவும், மத சார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் உள்ளனர்.தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 -இடங்களுக்கு மேல், காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகத்தில் உள்னர்.
இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தேர்தல் வெற்றி குறித்து கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இது ஆரம்ப கட்டம் தான். இன்னும் பல சுற்று வாக்குகள் எண்ண வேண்டும். எனவே, காங்கிரஸ் 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும்.
கர்நாடக மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் எடுபடவில்லை. மோடியோ, அமித்ஷாவோ, ஜே.பி. நட்டாவோ கர்நாடகாவுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரட்டும் என்று நான் சொல்லிக் கொண்டு இருந்தேன்.
அவர்களது பிரசாரத்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ஏனென்றால், கர்நாடக மக்கள் பாஜக ஊழல், தவறான நிர்வாகத்தால் அலுத்துவிட்டனர். மக்கள் விரோத செயலில் அவர்கள் ஈடுபட்டனர். அவர்கள் ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் இல்லாததால் மக்களும் அந்த கட்சியால் மகிழ்ச்சி அடையவில்லை. மக்கள் மாற்றத்தை விரும்பினர். அதற்கேற்ப தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
மோடி, அமித்ஷா என்று பாஜக தலைவர்கள் பல நாட்கள் இங்கேயே முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர். கட்டுக்கட்டாக பொய்களை அவிழ்த்து விட்டனர். அதெல்லாம் மக்களுக்கு தெரியும். எனவே, கர்நாடக மண்ண்னில் பாஜக மண்ணை கவ்வி விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.




