சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) விஞ்ஞானிகளுடன் இணைந்து, ஆழ்கடல் தகவல் தொடர்புக்கான அதிநவீன சென்சார் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். பாதுகாப்புப் பயன்பாடுகளுக்கு குறிப்பாக கடற்படைக்கு இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.
இத்தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கியதன் வாயிலாக, சர்வதேச அளவில் அமைந்துள்ள வார்ப்பகங்களை விட ஒப்பீட்டு அளவில் குறைந்த செலவில் நம்நாட்டில் சாதனங்களைத் தயாரிக்க உதவுகிறது. வெளிநாடுகளில் உற்பத்திக்கான செலவு அதிகம் என்பதுடன் வார்ப்பகங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளன.
குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் முதிர்வு அளவை மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பத் தயார்நிலையை (Technology Readiness Level – TRL) தேசியத் தொழில்நுட்ப தினத்தை (11 மே 2023) முன்னிட்டு அடைந்திருப்பது முக்கிய வளர்ச்சியாகும். விஞ்ஞானிகள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்களின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மே 11-ந்தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.’
உயர் செயல்திறன் கொண்ட மென்படலங்களை உருவாக்கவும், ‘பீசோ மென்படலங்களை அதிநவீன கடற்படை சென்சார் மற்றும் ஆழ்கடலில் பயன்படுத்தப்படும் வகையில் சாதனங்களாக மாற்றவும் ‘பீசோ எலெக்ட்ரிக் மெம்ஸ் தொழில்நுட்பம்’ தேவைப்படுகிறது. இந்த பீசோ மென்படலங்கள் என்பது பீசோ மெம்ஸ் சாதனங்களின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். அத்துடன் ஒலியியல் மற்றும் அதிர்வு உணர்திறன் பயன்பாடுகளுக்கும் உதவுகின்றன.
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களான பேராசிரியர் அமிதவ தாஸ் குப்தா, பேராசிரியர் போபி ஜார்ஜ் ஆகியோர் தலைமையில் விஞ்ஞானி டாக்டர் இ.வரதராஜன், ஐஐடி மெட்ராஸ்-ன் டிஆர்டிஓ இண்டஸ்ட்ரி அகாடமியா- ராமானுஜன் சென்டர் ஆஃப் எக்செலன்ஸ் (DIA-RCoE)-ல் டிஆர்டிஓ மூத்த விஞ்ஞானியான டாக்டர் வி.நடராஜன் ஆகியோர், ‘மென்படல சவ்வு அடிப்படையில் பீசோ மெம்ஸ் (நுண் மின்எந்திர அமைப்புகள்) ஒலி சென்சாரை உருவாக்கும் நோக்கில் உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
அதிநவீன பீசோ மெம்ஸ் தொழில்நுட்பத்தை உருவாக்குவதன் மூலம், இந்தியாவுக்கு பாதுகாப்புத் திறன்களின் எல்லைகளை உந்தித் தள்ளவும், இந்நாடு முக்கிய பயன்பாடுகளை உத்திசார்ந்த முறையில் செயல்படுத்தவும் உதவுகிறது. இந்தியக் கடற்படைக்கான டிஆர்டிஓ-வின் அடுத்த தலைமுறை சோனார் திட்டத்திற்கான தற்போதைய மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கு பீசோ மென்படலங்கள், மெம்ஸ் செயல்முறைத் தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.
இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளைப் பாராட்டிய ஐஐடி மெட்ராஸ் டீன் (தொழிலக ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) பேராசிரியர் மனு சந்தானம் கூறுகையில், “டிஆர்டிஓ மற்றும் கல்வித்துறை கூட்டுறவின் விளைவு இந்த அதிநவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக இந்தியக் கடற்படைக்கு முக்கியமான ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டார்.
ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள டிஆர்டிஓ இண்டஸ்ட்ரி அகாடமியா – ராமானுஜன் சென்டர் ஆஃப் எக்சலென்ஸ் (DIA-RcoE) தலைமையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. கொச்சி டிஆர்டிஓ-வின் கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகம் (NPOL), விசாகப்பட்டினம் டிஆர்டிஓ-வின் கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் (NSTL) ஆகிய டிஆர்டிஓ ஆய்வகங்களும் இத்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. புனேவில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ARDE), சென்னையில் உள்ள வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (VIT), பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) ஆகியவையும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றன.
இத்திட்டம் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ், டிஆர்டிஓ இண்டஸ்ட்ரி அகாடமியா-ராமானுஜன் சென்டர் ஆஃப் எக்சலென்ஸ் (DIA-RCoE) இயக்குநர் டாக்டர் ஓ.ஆர். நந்தகோபன் கூறுகையில், “இந்தியத் தொழில்துறையினரின் ஆதரவுடன் ஒரு அமைப்பாக மாற்றும் அளவுக்கு இத்தொழில்நுட்பம் முதிர்ச்சி பெற்றதாக உள்ளது. இந்தத் துறையிலும் நம் நாட்டிலும் இத்தொழில்நுட்பம் புதிய வர்த்தகங்களுக்கு வழிவகுப்பதுடன், ஆழ்கடலில் பொருட்கள் மற்றும் நுண்ணிய சாதன செயலாக்க தொழில்நுட்பத்தில் ‘தற்சார்பு இந்தியா’ இலக்கையும் அடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சிக் குழுக்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வகங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சர்வதேச அளவில், பல பீசோ மெம்ஸ் வார்ப்பகங்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் தொடர்பான பயன்பாடுகளுக்கு பல்வேறு பீசோ மெம்ஸ் சாதனங்ளை உருவாக்கி வருகின்றன. பீசோ மென்படலம் அடிப்படையிலான பீசோ எலெக்ட்ரிக் சாதன சந்தை என்பது தற்போது 5 பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகும். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 120 சதவீத அளவுக்கு கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (Compound Annual Growth Rate – GAGR) இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஐஐடி மெட்ராஸ் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் அமிதவ தாஸ் குப்தா மேலும் கூறும்போது, “ஐஐடி மெட்ராஸ், டிஆர்டிஓ இண்டஸ்ட்ரி அகாடமியா- ராமானுஜன் சென்டர் ஆஃப் எக்சலென்ஸ் ஆகிய இரு இடங்களிலும் உருவாக்கத்திற்கான (fabrication) வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது ஐஐடி மெட்ராஸ், டிஆர்டிஓ ஆகியவற்றின் இணைந்த சாதனையாகும்” என்றார்.
ஆழ்கடல் பயன்பாடுகளுக்கான பீசோ மெம்ஸ் ஒலியியல் சாதனங்களின் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப இடைவெளியை பீசோ மெம்ஸ் தொழில்நுட்ப உள்நாட்டு வளர்ச்சி இணைக்கச் செய்கிறது. பெரிய பரிமாணம் கொண்ட (100 மிமீ விட்டம்) பீசோ எலெக்ட்ரிக் மென்படலம் RF sputtering, Sol-Gel ஆகிய இரண்டாலும் சீரான தன்மை, அதிக பீசோ எலெக்ட்ரிக் பண்புகளுடன் புனையப்பட்டுள்ளது.
டிஆர்டிஓ விஞ்ஞானி டாக்டர் வரதராஜன் பேசும்போது, பீசோ மெம்ஸ் செயல்முறை தொழில்நுட்பத்தில் உள்ள முக்கிய சவால்கள் குறித்தும், ஆழ்கடலில் உள்ள சூழல், அதிக அழுத்தம், கடல்நீரின் அரிக்கும் தன்மை போன்ற அம்சங்களில் அதிக நம்பகத்தன்மை மற்றும் நீடித்து நிலைக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
பீசோ மெம்ஸ் செயல்முறையானது டிஆர்டிஓ குழுவுடன் இணைந்து, பீசோ மெல்லிய ஃபிலிமின் செயல்பாட்டை சிதைக்காமல், ஒலி சென்சாரை முழுமையாக புனைக்கும் பணி வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புனையப்பட்ட PZT மென்படலம் அடிப்படையிலான ஒலி சென்சார், வழக்கமான PVDF அடிப்படையிலான ஒலி சென்சாரை விட அதிக செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இந்த அதிநவீன சென்சார் தொழில்நுட்பம், உயர் செயல்திறன் கொண்ட பீசோ மெம்ஸ் ஒலி சாதனங்களை உருவாக்க ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. மேலும் பாதுகாப்புத் துறைக்கான பயன்பாடுகளுக்கும் இது சாதகமாக அமையும்.

