அரசியல் சாசனத்தைப் பற்றிய தனது பலவீனமான புரிதலை நிரூபிக்கும் பணியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஈடுபட்டிருப்பதுபோலத் தெரிகிறது. மருத்துவமனையில், நீதிமன்றக் காவலில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் வி. செந்தில் பாலாஜியை தான் பதவி நீக்கம் செய்துவிட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் அனுப்பிய கடிதம், முன்னுதாரணமே இல்லாதது மட்டுமல்ல; முன்யோசனையின்றி செய்யப்பட்டதும் கூட.
கடிதம் அனுப்பிய சில மணி நேரங்களிலேயே மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தான் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் பதிலுக்கு இந்திய அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்கவிருப்பதாகவும் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார். அரசியல் சாசன விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், தனது அதிரடியான நடவடிக்கைக்கு முன்பு உரிய சட்ட ஆலோசனையை அவர் பெற்றிருப்பார் என்றுதான் ஒருவர் நினைக்கக் கூடும்.
ஆனால் கடந்த கால நிகழ்வுக்கு பொருந்தக் கூடிய சட்ட ஆலோசனை பெற திரு. ரவி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார் என்பது அவரது மோசமான முடிவெடுக்கும் திறனையே காட்டுகிறது. மாநிலத்தின் நிறைவேற்று அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் அவர் செயல்படுவது மற்றும் முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களை நியமிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 153, 163 மற்றும் 164 வது பிரிவுகளை பயன்படுத்தியிருப்பதாக அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களை நியமிப்பது மற்றும் நீக்குவது தொடர்பான அதிகாரம் முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், ஆளுநருக்கு இதில் எந்த விருப்புரிமையும் இல்லை என்பதையே அரசியல் சாசன செயல்திட்டம் இந்த பிரிவுகளில் சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறது.
அமைச்சருக்கு எதிரான குற்றசாட்டுகள் மற்றும் சமீபத்திய உத்தரவில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் ஆகியவற்றை குறிப்பிட்டு தனது அசாதாரணமான நடவடிக்கையை நியாயப்படுத்த திரு. ரவி முனைந்திருக்கிறார். ஆனால் ஒரு அமைச்சரை நீக்குவதற்கான கோரிக்கை தார்மீக உணர்வுக்கான வேண்டுகோள்தானே தவிர சட்டரீதியான தேவை இல்லை. ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிற தனது முந்தைய ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்கிற காரணத்தால் தன்னிச்சையாக ஆளுநர் ஒருவரை நீக்குவதென்பது அரசியல் சாசன கெடுநிகழ்வன்றி வேறு எதுவும் இல்லை. குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமைச்சர்கள் தாமே விலகுவது அல்லது முதலமைச்சர்களால் நீக்கப்படுவதே விரும்பத்தக்கதாக இருக்கும்.
கடந்த காலங்களில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால் அமைச்சர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது தார்மீக அடிப்படையிலானதே தவிர அரசியல் சாசனத்தின் கட்டாய அம்சம் இல்லை. முந்தைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அவர் பங்கு வகித்த காலகட்டத்தில் திரு. செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்ட லஞ்சப் புகார்களும், அதில் கிடைத்த பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுகளும், அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை பதவி விலகும் அளவுக்கு தீவிரமானவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அமைச்சர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக “பதவி என்கிற கேடயத்தை” முதலமைச்சர் வழங்குகிறார் அல்லது அமைச்சரவையில் அமைச்சர் தொடர்வது உரிய சட்ட நடைமுறைக்கு இடையூறாக இருக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க திரு. ஸ்டாலின் தாமாகவே முன் வந்து செயல்பட்டிருக்கலாம். ஆனால், ஆளுநரின் தவறான செயலை எதுவும் நியாயப்படுத்த முடியாது.

