அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேச்சுக்கள் அதிமுகவினரை பொங்கி எழ வைத்துள்ளது. எனவே, அதிரடி பேட்டி அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். அந்த பேட்டியின் முழு விபரம் வருமாறு:
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவை விமர்சனம் செய்த அண்ணாமலையை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள். கழக பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை பத்திரிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் வாசித்தார். கடுமையான அளவுக்கு அம்மாவை விமர்சனம் செய்து எங்களுடைய கண்டனத்தை தெரிவித்த பிறகு ஏதே அண்ணாமலை திருந்திவிட்டார் என்ற வகையில் பார்க்கும்போது தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்திவருகிறார். பிஜேபி என்பதைவிட அண்ணாமலை என்கின்ற பிம்பம் தமிழகத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதற்காக செயல்படுகிறார். அம்மாவை விமர்சனம் செய்தபிறகு எங்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டு அதன்பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார்.
நான் அம்மாவை பெரிதும் மதிக்கின்றேன். நான் அம்மாவை அதுபோல சொல்லவில்லை என்ற தகவலை சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு அதன்பிறகு அண்ணா குறித்து பேசுகிறார். அண்ணாவின் வரலாறு என்ன? அண்ணா உலகம் முழுவதும் போற்றக்கூடிய மிகப்பெரிய அறிஞர். எந்த கேள்வி எப்போது கேட்டாலும், எந்த மொழியில் கேட்டாலும் பதில் சொல்லக்கூடியவர், பன்மொழி தன்மை வாய்ந்தவர். முதலமைச்சராக வந்து தாழ்ந்த நிலையில் இருந்த தமிழகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டுசென்றவர். நாங்கள் தெய்வமாக வணங்கக்கூடியவர். எங்கள் கழகமே அண்ணாவின் பெயரை தாங்கி இருக்கும் நிலையில், அண்ணாவைப்பற்றி சிறுமைப்படுத்தும் வகையிலே அவர் கூறிய அந்த கருத்துக்கு, கடுமையான அளவுக்கு கண்டனத்தை தெரிவித்த நிலையில் அதற்கும் திருந்தாமல், திரும்பவும் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்பதற்காக நேற்றைய தினம் பேட்டியில் பெரியார் குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும் கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற செயலை தன்மானம் உள்ள கழக தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
சிட்டு குருவிக்கு பட்டை கட்டினால் அது திமிரு பிடித்து ஆடும். வீட்டில் உள்ள பண்ட பாத்திரங்களில் வந்து டொக், டொக் என்று கொத்தும். அது சிட்டு குருவிக்கே உள்ள புத்தி அது. அதுபோல தகுதிக்கு மீறிய பதவி. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து எதற்கு விருப்ப ஓய்வு பெற்றார் என்று எனக்கு தெரியாது. அது குறித்து கிளறினால்தான் இவரைப்பற்றி தெரியும். அரசியல் தலைவருக்கே லாயக்கு இல்லாத, ஒரு பாஜக தலைவருக்கு லாயக்கு இல்லாத, ஒரு சிறுமை புத்தி கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார். கழகம் என்பது ஒரு சிங்க கூட்டம். அந்த சிங்க கூட்டத்தை பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறது.
ஊளையிடுகின்ற சிறுநரி தனியாக சென்று நிற்கட்டும். நோட்டாகவுக்கு கீழே அண்ணாலை ஒட்டு வாங்குவரே தவிர நோட்டாவை தாண்ட மாட்டார். அப்படிதான் உள்ளது உங்களின் செல்வாக்கு.நீங்கள் பெரியார் குறித்து பேசுகிறீர்கள்.பெரியார் குறித்து பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. கழகப் பொதுசெயலாளர் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. அம்மா குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. புரட்சித்தலைவர் குறித்து பேச என்ன தகுதி உள்ளது. தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அண்ணாலை வாழ்க என்று சொல்லவேண்டுமாம். தோழமை கட்சியை, கூட்டணி கட்சியை அதனை விமர்ச்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று சொன்னால் நிச்சயமாக கழக தொண்டன் ஏற்றுக்கொள்ள மாட்டான். பல முறை எச்சரிக்கை அளித்தோம். பேச்சை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்தோம்.
இனிமேல் எங்கள் கழக தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள். நீங்கள் ஒரு கருத்தை தெரிவித்தால் ஓராயிரம் கருத்து அண்ணாமலை குறித்து, அவரின் சிறுமைபுத்தி குறித்து, எதிர்க்கருத்து உங்களுக்கு பதிலடியாக வரும். இது குறித்து மேலிடத்திலும் சொன்னோம். நாங்கள் உங்கள் கூட்டணியில் இருக்கிறோம் இவரை திருத்துங்கள் என்று தெரிவித்தோம். கூட்டணி கட்சியில் இருந்துகொண்டு இப்படி பேசினால் கட்சியினர் எப்படி தேர்தல் வேலை செய்வார்கள். கழகத்தின் கூட்டணியை பாஜக தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? உங்களை சுமக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது.
யார் மீதாவது சுமந்துதான் நீங்கள் போகவேண்டும். உங்களுக்கு கால்களே கிடையாது. பாஜக இங்கே கால் ஊன்ற முடியாது. அப்படிப்பட்ட நிலைமை உள்ளது. உங்கள் வாக்கு வங்கி எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியும். எங்களை வைத்துதான் உங்களுக்கு அடையாளமே. தன்மானம் உள்ள தொண்டன் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இது குறித்து நாங்கள் டெல்லி மேலிடத்திலும் சொல்லிவிட்டோம். கண்டித்து வையுங்கள் என்று சொன்னால், திரும்ப திரும்ப இப்படி பேசினால் இனியும் பொருத்து கொள்வதாக இல்லை. கழக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். இதுதான் எங்களுடைய நிலைபாடு. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால் கடுமையான விமர்ச்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும். துப்பாக்கி, துப்பாக்கி என்கிறார். அவரின் புகழை பாடுவதைதான் வேலையாக வைத்துவருகிறார். அவர் சார்ந்த கட்சியை வளர்ப்பது அவர் வேலையாக இல்லை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
கேள்வி: இது உங்களின் தனிப்பட்ட கருத்தா, கட்சியின் கருத்தா?
பதில்: என்றைக்கு தனிப்பட்ட கருத்தாக நான் பேசியது கிடையாது. கட்சி என்ன முடிவு எடுக்கின்றதே அது குறித்துதான் பேசுவேன். கட்சியின் முடிவு என்பது இப்போதைக்கு கூட்டணி கிடையாது. பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலே கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பிறகும் அண்ணாவை விமர்சனம் செய்வது, பெரியாரை விமர்சனம் செய்வது, கழக பொதுச்செயலாளரை விமர்சனம் செய்கிறார் என்றால் எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.
அண்ணாலை விமர்சனம் செய்வதை நாங்கள் டெல்லி தலைமையிடம் சொல்லியிருக்கின்றோம். மாநில தலைவர்களாக எவ்வளவே தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்போது இதுபோன்ற பிரச்சனை இருந்ததா? ஆதி காலத்தில் நடைபெற்றதை இப்போது தேவையற்ற முறையில் பேசி வருகிறார். இவர் என்ன தொல்லியல் துறையை சேந்தவரா? தொல்லியல் துறையில் இருக்கவேண்டியவர். தகுதி இல்லாத ஒரு தலைவர். நான்கு பேர் சேர்ந்து தலைவர் என்று கத்திவிட்டால் தலை கனம் ஏறிவிடுகிறது. அந்த தலை கனம்தான் இதுபோன்ற முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
கேள்வி: தேசிய தலைவர்கள் ஆதரவோடுதான் அவர் இப்படி பேசுகிறார் என்று நினைக்கின்றீர்களா?
பதில்: எங்களுக்கு இதனை ஆராய்ச்சி செய்யவேண்டிய வேலை இல்லை. எங்களின் முன்னோடிகளை விமர்சனம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். விமர்சனத்திற்கு தக்க பதிலடியை எங்கள் கட்சியினர் கண்டிப்பாக கொடுப்பார்கள். மேலே சொல்லியும் இவர் அடங்கவில்லை என்றால் மேலே சொல்லிதான் நடக்கிறது என்றுதானே அர்த்தம். இதுபோன்ற நிலையில் எங்களுக்கு இழப்பு இல்லை. உங்களுக்குதான் இழப்பு. பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ். அனைவரையும் அரவணைத்து போகவேண்டும் என்பதால் டெல்லியில் தலைவர்களை சந்தித்துவிட்டு வந்தோம். எதற்கும் ஒரு எல்லை உள்ளது இல்லையா. எப்படி தொண்டர்கள் வேலை செய்வார்கள். 2024 ல் எப்படி தேர்தல் வேலை செய்ய முடியும். அவர்களால் ஒன்றும் கிழிக்க முடியாது.
அண்ணாலையின் பேச்சை அவர்களின் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் இன்றைக்கு சந்தோஷப்படுவார்கள். ஏன் என்றால் மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரம் கட்டிவிட்டு ஒன் மேன் ஷோ வா இருந்தார். தற்போது தனி மரமாக நிற்பார். எந்த பூச்சாண்டிக்கு கழகம் பயப்படாது. கோப்பு, பைல் என்று நாங்கள் எத்தனையோ பார்த்துவிட்டோம். நீங்கள் கோப்பு என்ன என்று தெரியாத ஆள். அவர் தனியாக நின்று ஓட்டு வாங்க முடியுமா? நோட்டாவைதான் அவர் வெற்றி பெற முடியும்.அண்ணாமலையின் விமர்சனங்களை எங்கள் கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தோழமையில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மதிக்காத ஒரு நிலையில் கூட்டணியில் நீடிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஏற்கனவே இதுபோன்று பேசிகொண்டிருந்தால் கூட்டணி குறித்து மறுபரீசிலனை செய்யவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டோம். இப்போது பரிசீலனை செய்து அறிவித்துவிட்டோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

