திருச்சி ஐடிசி நிறுவனத்தில் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்: தஞ்சாவூர் நிஃப்டெம் தொடங்கியுள்ளது
மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் தஞ்சாவூரில் இயங்கும் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மேலாண்மை நிறுவனம் (நிஃப்டெம்), திருச்சி ஐடிசி நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி வளாகத்தில் உதவி பேக்கிங் தொழில்நுட்ப வல்லுநர் சான்றிதழ் படிப்பிற்கான குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை 3 அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தஞ்சாவூர் நிஃப்டெம் இயக்குநர் பேராசிரியர் வெ பழனிமுத்து தொடங்கி வைத்தார். ஐடிசி நிறுவனப் பொது மேலாளர் திரு சுர்ஜித் சிங் ரோரியா, மூத்த மனிதவள மேலாளர் திரு பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சியின் முதல் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 18 பேர், ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 20 வரை தொழில் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்த நேரடித் திறன் மேம்பாட்டுப் பயிற்சியைப் பெறவுள்ளனர். இந்தத் தொழிற்சாலை வளாகத்திலேயே அவர்களுக்குப் நடைமுறைப் பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, பயிற்சி முடிப்பவர்களுக்கு ஐடிசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவு பதனப்படுத்துதல் துறையின் பல்வேறு பிரிவுகளில் தேசிய அளவிலான அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களுடன் இத்தகைய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், தொழில்துறைக்குத் தேவையான தகுதியுள்ள மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
