தொழில் நிறுவனங்களின் அபராதம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுமூகத் தீர்வு காண விஸ்வாஸ் 2026-ஐ இபிஎஃப்ஓ அறிமுகம் செய்துள்ளது.
ஊழியர் வருங்கால வைப்புநிதி, பல்வகை அம்சங்கள் சட்டம் 1952, பிரிவு 14பி, சமூகப் பாதுகாப்பு சட்டத்தொகுப்பு 2020 பிரிவு 128 ஆகியவற்றின் கீழ், அபராதம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பு விஸ்வாஸ் 2026 என்ற முன்முயற்சியை தொடங்கியுள்ளது.
தாமாக முன்வந்து இணக்கம் தெரிவித்தல், வழக்குகளைக் குறைத்தல், ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், அபராதங்கள் தொடர்பான நீண்ட காலம் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண விஸ்வாஸ் 2026 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வெளிப்படையான, முழுவதும் டிஜிட்டல் முறையிலான, காலவரம்புக்கு உட்பட்ட நடைமுறையின் மூலம் தகுதியான வழக்குகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்பை வேலைவழங்குவோருக்கு அளிக்கிறது.
நீதித்துறையின் முன் வழக்காக உள்ள அபராதம் செலுத்த உத்தரவிடக் கூடிய வழக்குகள்;
பிடித்தத்திற்கான சான்றிதழ் வழக்குகள் உட்பட நிலுவையில் உள்ள பிடித்தம் அல்லது பகுதி அளவு பிடித்தம் செய்த இறுதி அபராத உத்தரவு சார்ந்த வழக்குகள்;
அபராதம் தொடர்பாக இறுதி உத்தரவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இன்னமும் தீர்வு காணப்படாத வழக்குகள்;
அபராதத்திற்கு இன்னமும் நோட்டீஸ் அனுப்பப்படாத வழக்குகள் என 4 வகையிலான வழக்குகளை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் இருக்கும்.
டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ் அல்லது இ-கையொப்பத்தைப் பயன்படுத்தி இபிஎஃப்ஓ வேலை வழங்குவோர் போர்ட்டல் மூலம் விஸ்வாஸ் 2026-ன் கீழ் விண்ணப்பங்களைச் சமர்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தை சுமூகமாக அமலாக்குவதற்கு விரிவான நடைமுறை வழிகாட்டுதல்களை அனைத்து மண்டலங்கள், பிராந்தியங்கள், மாவட்ட அலுவலகங்களுக்கு இபிஎஃப்ஓ அனுப்பியுள்ளது.
