நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக பீகார், உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நேபாளத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவு மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் நேபாளத்திற்கு இந்தியா உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய எல்லைப் பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம், மீட்புக் குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மத்திய நீர்வள ஆணையத்தின் முன் எச்சரிக்கையின்படி, நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் திடீரென்று உயர்ந்துள்ளதால், அதன் தாக்கம் இந்தியாவில் உள்ள கண்டக் ஆற்றுப் படுகையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இதனையடுத்து எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பீகார், உத்தரப் பிரதேசம் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
உள்துறை, வெளியுறவுத்துறை, ஜல்சக்தி, பாதுகாப்பு அமைச்சகங்களின் அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேபாளத்தின் நீர்த்தேக்கப் பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது. நேபாளத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவ காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் +977 985 131 6807, +977 970 910 7500 ஆகிய அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
