’’பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு மே 11-ம் தேதி முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்’’ என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 8,03,385 மாணாக்கர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,55,451 மாணாக்கர்கள் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 47,387 மாணாக்கர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இந்த நிலையில், தேர்வில் தோல்வி அடைந்த மாணாக்கர்களுக்கு ஜுன் 19 ந் தேதி முதல் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அனைத்து பாடங்களுக்கும் நடத்தப்படும் இந்த துணைத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும், ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலே உயர்கல்வியைத் தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு (Govt Examination Service centre) சென்று ஆன்லைன் மூலம் பதிவேற்ற வேண்டும்.
இந்த சிறப்பு துணைத் தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த தேர்வுக் கால அட்டவணை, விண்ணப்பம் செய்வதற்கான உரிய நாட்கள் முதலான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். பெற்றோர் மற்றும் மாணவர்கள் அவ்வப்போது இந்த இணையதளத்தை பார்க்குமாறு பள்ளிக் கல்வித்துறையின் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

