Home செய்திகள் ”விளையாட்டு விடுதிகளில் மாணவர், மாணவியர் சேர்க்கை மே 23-ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பம்”

”விளையாட்டு விடுதிகளில் மாணவர், மாணவியர் சேர்க்கை மே 23-ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பம்”

0
”விளையாட்டு விடுதிகளில் மாணவர், மாணவியர் சேர்க்கை மே 23-ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பம்”

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது மானியக்கோரிக்கையில் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஒவ்வொரு விளையாட்டை ஊக்கவிக்கவும் அதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், பள்ளிக்கூட மாணவ, மாணவியர்களுக்கு அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கி படித்துக்கொண்டே விளையாட்டுதுறையில் சாதனை படைப்பதற்கான அறிவிப்பை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும்  விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மாணவ / மாணவியர் சேர்க்கை  குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் கீழ்கண்ட மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி: மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. 

மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதி: ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி, (ஸ்ரீரங்கம்)  மற்றும் திருநெல்வேலி.

மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் ஈரோடு.

மாணவ/மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி –  சத்தூவச்சாரி, வேலூர்.

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையட்டு வீரராக விளங்குவதற்கு 7-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு சேர்க்கையும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ஆம் வகுப்பு, 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 24.05.2023 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கங்களில் நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கான தேர்வுப் போட்டிகள் கீழ்கண்ட விளையாட்டுக்களில் நடைபெறும்:

1.தடகளம்  2.இறகுப்பந்து 3.கூடைப்பந்து 4.குத்துச்சண்டை
5.கிரிக்கெட் 6.கால்பந்து 7.வாள்சண்டை 8.ஜிம்னாஸ்டிக்
9.கைப்பந்து 10.வளைகோல்பந்து 11.நீச்சல் 12.டேக்வாண்டோ
13.கையுந்துபந்து 14.கபாடி 15.மேசைப்பந்து 16.டென்னிஸ்
17. ஜூடோ 18.ஸ்குவாஷ் 19.வில்வித்தை  20. பளுதூக்குதல் 

 

மாணவியர்களுக்கான தேர்வுப் போட்டிகள் கீழ்கண்ட விளையாட்டுக்களில் நடைபெறும்

1.தடகளம்  2.இறகுப்பந்து 3.கூடைப்பந்து 4.குத்துச்சண்டை
5. கால்பந்து 6. வாள்சண்டை 7. கைப்பந்து 8. வளைகோல்பந்து
9. நீச்சல் 10. டேக்வாண்டோ 11. கையுந்துபந்து 12. கபாடி
13. டென்னிஸ் 14. ஜூடோ 15. ஜிம்னாஸ்டிக் 16. ஸ்குவாஷ்
17.வில்வித்தை  18. பளுதூக்குதல்  19.மேசைப்பந்து

 

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ / மாணவியர்கள், விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 16.05.2023 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள். 23.05.2023 அன்று மாலை 5.00 மணி ஆகும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்..மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர விரும்பும் மாணவ / மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் 24.05.2023 அன்று காலை 7.00 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாமல் கலந்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here