பாண்டிய மன்னர்களின் சின்னமாக திகழ்ந்த மீன் சின்னம் சிலையை எங்கே வைப்பது என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் ஜூலை 18 அன்று ஆலோசனை நடத்தினர். குழுவின் தலைவர் மூத்த வழக்கறிஞர் காந்தி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் கே.ராஜு, வி. வி. ராஜன் செல்லப்பா, கோ.தளபதி, மு.பூமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். காவல் துறை, மாநகராட்சி, ரயில்வேத்துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மதுரை ரயில் நிலையம் முன் 1999 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் 3 டன் எடை கொண்ட மீன் சின்னத்தின் சிலை வைக்கப்பட்டு இருந்தது, 2019 ஆம் ஆண்டு ரயில் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக மீன்கள் சிலை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட மீன் சின்னங்கள் சிலையை எங்கே வைப்பது என ஆலோசித்து முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில் “மீன் சின்னம் பாண்டிய மன்னர்களின் சின்னம், சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்ட சின்னம், மதுரை மாநகராட்சிக்குள் பொருத்தமான இடத்தில் மீன் சின்னத்தை நிறுவ ஆலோசிக்கப் பட்டது. வெள்ளிக்கிழமையன்று 3 இடங்களை ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க உள்ளோம். ரயில்வே நிர்வாகம் மதரீதியான சின்னங்களை வைக்க அனுமதி மறுக்கிறது. தனித்த அடையாளமாக உள்ள மீன் சின்னத்தை வைப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள், மதுரை ரயில் நிலையத்தில் புதிய கட்டுமானம் அமைய உள்ளது. அக்கட்டடத்தில் மதுரையின் அடையாளமான மீன் சின்னத்தை வைக்க வேண்டும்.
கன்னியாகுமரியில் 10 ஆண்டு களாக திருவள்ளுவர் சிலையை பராமரிக்காமல் இருந்தது அனைவருக்கும் தெரியும், நூலகத்திற்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம், அண்ணா நூற்றாண்டு நூல கத்தில் நீதிமன்றம் தலையிட்டு பாரமரிப்பு பணிகளை செய்ய வைத்தது, அதிமுக ஆட்சி காலத்தில் 2016 இல் மதுரையில் 6 கோடி மதிப்பில் நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது, அப்படி நூலகத்தை கட்டி திருவள்ளுவர் பெயரை வைத்திருக்கலாம், கலைஞர் நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயரை வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

