டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:
தமிழச்சி தமிழிசையின் மனம் நிறைந்த நன்றிகள்.
நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது.
புதிய பாராளுமன்றத்தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ்..
மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்திற்குள்
எளிய சிவனடியார்கள் புடை சூழ நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பொற்கரங்களால் முதல் நிகழ்வாக தமிழகத்து செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது.
நீதி வழுவாத செங்கோல் என்று சொல்லப்படும் செங்கோல் நம் பாராளுமன்றத்தை முதன்முதலில் அலங்கரிக்கிறது. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாரதப் பிரதமர் மிகப்பெரிய பெருமையை தமிழுக்கும், தமிழர்களுக்கும் கொடுத்தது தமிழச்சி என்ற வகையில் மெய்சிலிர்த்து கண்டேன். அதற்காக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடியார்கள் அரசாள்வர் என்ற திருஞானசம்பந்தரின் வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு மக்கள் அரசாளும் பாராளுமன்றத்திற்குள் ஒலித்து இருப்பது தமிழக ஆன்மீகம் எவ்வளவு தொலைநோக்கு பார்வைகொண்டது.
அன்று பாடியது.
பாராளுமன்றம் மூலம் இன்று மக்களை நாடியது.
யார் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தமிழக மக்கள் அனைவரும் மனதிலும் செங்கோல் நிறுவிய காட்சி பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது.
இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் வரலாற்று புகழ் சேர்த்திருக்கிறது. இதை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும்,தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்று பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
அவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என் தமிழுக்கு கிடைத்த பெருமையை தமிழுக்கு சூட்டிய மகுடமாக நினைத்து பாரதப் பிரதமருக்கு கோடான கோடி தமிழக மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சி.பி.ராதாகிருஷ்ணன்: உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் மிகவும் பெருமையான தருணம் . நமது மாண்புமிகு பாரத பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அண்ணாமலை: இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.கோளறு பதிகத்தில் வரிகள் ஒலிக்க, தமிழர்களின் கலாச்சார அடையாளமான செங்கோல், தமிழகத்தின் சைவ ஆதீனங்களின் ஆசிர்வாதத்துடன் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் இன்று பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டது.
வானதி சீனிவாசன்: தமிழ் நாட்டின் ஆதீனங்கள் பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் அரும்பெரும் சேவையை செய்து வருகிறார்கள். அவர்களின் தமிழ் தொண்டுகளுக்கும் சேவைக்கும் உகந்த அங்கீகாரத்தை, திருவாவடுதுறை செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் நிறுவியதன் மூலம் இந்திய அரசு வழங்கி இருக்கிறது! பாரத பிரதமர் அவர்கள் நம் தாய் மொழி தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும், தமிழக ஆதீனத்திற்கும், தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் சிறப்பு சேர்க்கும் விதமாக மிகச்சரியான அங்கீகாரத்தை வழங்கி இருப்பதன் மூலம், தமிழ் மக்களின் பாரம்பரியமும், கலாச்சாரமும் உலகரியச் செய்தமைக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றியை உரித்தாக்குகிறோம்!

