அரிவாள் வடிவ செல் நோய்க்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு கிரிஸ்பர் தொழில்நுட்பம் அடிப்படையிலான “பிர்சா 101” மரபணு சிகிச்சை குறித்த பயிலரங்கு நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் பழங்குடியின மக்களைப் பெருமளவில் பாதிக்கும் அரிவாள் வடிவ செல் நோயை ஒழிப்பதற்கான இந்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த முன்முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது.
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் (சிஎஸ்ஐஆர்) மற்றும் சிஎஸ்ஐஆர்-மரபணுவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (ஐஜிஐபி) ஆகியவற்றுடன் இணைந்து, பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், அரிவாள் வடிவ செல் நோய்க்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு CRISPR தொழில்நுட்பம் அடிப்படையிலான “பிர்சா 101” மரபணு சிகிச்சை குறித்த ஒரு பயிலரங்கை நடத்தியது. நடைபெற்று வரும் பழங்குடியினர் கவுரவ பெருவிழா 2026 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று (May 14) புது தில்லியில் இந்தப் பயிலரங்கம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் உத்வேகம் பெற்று, வளர்ச்சியடைந்த இந்தியாவின் பயணத்தைக் கொண்டாடும் ஒரு மாத கால விழாவே பழங்குடியினர் கவுரவ பெருவிழாவாகும். பகவான் பிர்சா முண்டாவின் நினைவாகப் பெயரிடப்பட்ட “பிர்சா 101”, இந்தியாவின் வளர்ந்து வரும் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மரபணு ஆராய்ச்சிச் சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் பழங்குடியின மக்களைப் பெருமளவில் பாதிக்கும் அரிவாள் வடிவ செல் நோயை ஒழிப்பதற்கான இந்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த முன்முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது.

நிகழ்ச்சியில் பேசிய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் ரஞ்சனா சோப்ரா, பழங்குடியின சமூகத்தினருக்கான சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்கு, மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உள்நாட்டுப் புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் சுகாதார சேவை கிடைப்பதை உறுதிசெய்ய, அறிவியல் நிறுவனங்களுக்கும் அரசு முகமைகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

