பிரதமர் நரேந்திர மோடி-யின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், தென்சென்னை மாவட்டத் தலைவர் காளிதாஸ் ஜூன் 18-ம் தேதி தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது:
பிரதமர் நல்லாட்சியில், உலக அளவில் இந்திய பொருளாதாரம் பல மடங்கு முன்னேறியிருக்கிறது. உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கான மருத்துவக் காப்பீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில், தமிழக மக்கள் பெருமளவில் பயன்பெற்றிருக்கிறார்கள்.
அவதூறு பரப்புபவர்களைத் தங்கள் அலுவலகத்தில் வைத்துக் கொண்டு, திமுக ஆட்சியின் அவலத்தை மக்களுக்குக் கொண்டு செல்பவர்கள் மீது, வழக்கு தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்தை முடக்க முயல்கிறது. தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா-வை பொய் வழக்கில் கைது செய்திருக்கிறது. இதற்கெல்லாம் பாஜக தொண்டன் அஞ்சப் போவதில்லை.

திமுக ஆட்சியில் ஊழல் மலிந்திருக்கிறது. ஊழல் செய்த அமைச்சரைக் காப்பாற்ற திமுக முயல்கிறது. திமுகவில் அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. எனவே எதிர்க் குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்க நினைக்கிறது திறனற்ற திமுக. காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு, ஊழல் மிகுந்ததாகவும், தமிழ் மக்களுக்கெதிரானதாகவும்தான் இருந்திருக்கிறது. மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய கூட்டணி திமுக கூட்டணி.
ஊழலற்ற நல்லாட்சி தொடர, தேசம் பாதுகாப்பாகத் தொடர, வரும் பாராளுமன்றத் தேர்தலில், பெருவாரியான வெற்றியை பெற்று பாரதப் பிரதமரின் நல்லாட்சி தொடர, நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
கூட்டத்தில், தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், ஸ்ரீதரன், மாநிலச் செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், பிரேமிளா, பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் ரமேஷ் சிவா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மற்றும், மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், பாஜக-வினர் கலந்து கொண்டனர்.

