திருநெல்வேலி மாவட்டத்தில் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றானது வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம். அதன் 138-வது ஆண்டு திருவிழா இன்று ஜுலை 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலை 7.30 மணிக்கு திருப்பலியும், மாலை ஆராதனை, மறையுரை நடைபெறுகிறது. வருகிற 2-ந் தேதி 7-ம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு மாதா காட்சி கொடுத்த மலைகெபியில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
ஆகஸ்ட் 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறுகின்ற திருப்பலியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுநன்மை வழங்குகிறார். மாலை 6.30 மணிக்கு ஆயர் தலைமையில் நற்கருணைப்பவனி நடைபெறுகிறது.

4-ந் தேதி காலை 5.15, 7.30, 9.30, 11.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, 12 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.
5-ந் தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, பிற்பகல் 2 மணிக்கு அதிசயபனிமாதா அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகிறது.

6-ந் தேதி காலை 7.30 மணிக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் நன்றி திருப்பலியும், காலை 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழா, ஏற்பாடுகளை பேராலய தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்குத்தந்தை வளன் அரசு மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

