சென்னை, மாநிலக் கல்லூரி, திருவள்ளுவர் அரங்கத்தில் 18.07.2023 அன்று தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் “தமிழ்நாடு நாள்” விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ‘’தமிழன்னை, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்’’ ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தமிழ்நாடு நாள் ஜூலை 18 சிறப்பு மலரை மாணவ மாணவியர்களுக்கு வழங்கி, தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர். மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
நமது சிறப்பு வாய்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்புக்கிணங்க, கடந்த ஆண்டு முதல் இதே நாளை அதாவது ஜூலை 18-ஐ “தமிழ்நாடு நாள்” விழாவாக கொண்டாட வேண்டும் என்கிற வகையில், அரசாணை வெளியிட்டார்கள். அதற்கு காரணம் இங்கே அனைவரும் பேசி இருக்கிறார்கள், நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் கோடிட்டுக் காட்டுகிறேன். நம்முடைய அறிவு உலக மேதை பேரறிஞர் அண்ணா, தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்றபொழுது, அன்றைக்கு நம்முடைய முத்தமிழறிஞர் அய்யா கலைஞர் அவர்களும் அந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள். அந்த வகையில், இந்த சிறப்பு வாய்ந்த அறிவிப்பு அன்றைக்கு இதே நாளில் 1967-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் “தமிழ்நாடு” என்று நாம் இனிமேல் அழைப்போம் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின் அடிப்படையில் தான், நம்முடைய முதலமைச்சர் அதை கடைபிடிக்கின்ற வகையில் இந்த அரசாணை வெளியிட்டார்கள். அந்த வகையில், இது இரண்டாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதும் அதில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி இருக்கக் கூடிய எனக்கு முன்னால் வாழ்த்துரை வழங்கி உரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக்கின்ற, நம்முடைய அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கின்ற தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருக்கின்ற மாணவச் செல்வங்கள், பத்திரிக்கையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் அத்தனை பேருக்கும் காலத்தின் நேரத்தை கருதி சுருக்கமாக வணக்கத்தை நான் உரித்தாக்கிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா ஆட்சி:
இங்கே எனக்கு முன்னால், நம்முடைய முனைவர் மா. ராஜேந்திரன், சுப. வீரபாண்டியன், ஆழி செந்தில்நாதன் போன்றவர்கள் இங்கே விளக்கமாக ஒவ்வொரு தலைப்பிலும் இன்றைக்கு உங்களிடத்தில் பல்வேறு கருத்துக்களை எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள். நான் மீண்டும் அதற்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சங்கரலிங்கனார், ஏறத்தாழ 76 நாட்கள் அந்த உண்ணாவிரதம் மேற்கொண்டு அது நிறைவேறாத சூழ்நிலையில், அவர் உயிர் நீத்தார். அந்த அடிப்படையில் பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு, அதைக் கோடிட்டுக் காட்டி, அதே நேரத்தில் நம்முடைய தமிழருடைய உணர்வுகளை எதிரொலிக்கின்ற வகையில்தான் அந்த “தமிழ்நாடு நாள்” என்கிற அறிவிப்பை வெளியிட்டார். அதை வெளிக் கொண்டு வராமல் இருந்த அந்த சூழலில் கூட நம்முடைய தமிழக முதல்வர், இன்றைக்கு இந்த அரசாணை வெளியிட்டார்கள். அந்த வகையில், பல்வேறு பொருத்தமான நிகழ்ச்சிகள் இந்த மாநிலக்கல்லூரியில் நடைபெறுகிறது. இதே கடற்கரையில்தான் பல்வேறு கோரிக்கைகளை வைத்து அதற்கான பொதுக்கூட்டங்கள் எல்லாம் நடைபெற்று இருக்கிறது. அதே போல, பல பேர் உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், “தியாகிகள் தினம்” என்று நேற்றைக்கு நம்முடைய தமிழ்நாடு அரசின் சார்பிலே கடைபிடிக்கப்பட்ட நேரத்தில், இந்த மரியாதைக்குரிய சங்கரலிங்கனார் அவர்களுக்கும் நேற்றைக்கு மலர்மாலையை நானும், நம்முடைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அவர்களும், நம்முடைய துறையினுடைய செயலாளர் மற்றும் இயக்குனர் போன்றவர்கள் எல்லாம் அங்கு மரியாதை செய்தோம். அந்த அடிப்படையில், இன்றைக்கு அவர் சார்ந்த இந்த நிகழ்ச்சி வருவதும் அதிலே பல்வேறு பொருத்தங்கள்.
அதுவும் ஒரு சிறப்பு:
அதே நேரத்தில், பேரறிஞர் அண்ணா அமைச்சரவையில் இருந்த நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர், நூற்றாண்டு விழா இப்போது. அதேபோல அவருடைய அரசியல் வாரிசாக, இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, இந்த நாளை அரசாணையாக வெளியிட்டு “தமிழ்நாடு நாள்” விழா என்று ஒவ்வொரு நாளும் இந்த ஜூலை 18 அரசின் சார்பில் கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கின்றார்கள். அதுவும் ஒரு சிறப்பு.
அதே நேரத்தில் இன்றைக்கு நடைபெறக்கூடிய நிகழ்ச்சியோ நம்முடைய திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி என்கிற வகையில், நம்முடைய மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த இந்த தொகுதியிலும், இங்கே நடைபெறுகிறது என்கிற வகையில், பல்வேறு சாலப் பொருத்தங்கள் இங்கே அமைந்திருப்பது என்பதை நான் மிகுந்த பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேபோல பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறபோது, பல்வேறு கேள்விகள் எழுந்ததாக வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. நம்முடைய சட்டமன்ற குறிப்பேட்டில் இருப்பது பற்றி இங்கே எனக்கு முன்னால் பேசியவர்கள் எடுத்துச் சொன்னார்கள்
அந்த வகையில்தான், மரியாதைக்குரிய என். எம். லிங்கம் எழுந்து கேட்கிறார். தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதன் மூலம் நீங்கள் அடையப் போவது என்ன?
பேரறிஞர் அண்ணா பதில்: ’’நான் எதை அடைவேன். பார்லிமெண்ட் என்பதை லோக்சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள். கவுன்சில் ஆஃப் ஸ்டேட் என்பதை ராஜ்யசபை என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள். பிரசிடென்ட் என்பதை ராஷ்டிரபதி என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள். நான் உங்களை திருப்பிக் கேட்கிறேன். தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் நீங்கள் எதை இழக்க போகிறீர்கள். உங்களுக்கு என்ன லாபம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. உணர்வுபூர்வமாக நாங்கள் திருப்தி அடைவோம். பழந்தமிழ் சொல்லொன்று கோடிக்கணக்கானவர்களின் நாவிலும், மனங்களிலும் இடம் பெறுகிறது என்ற மகிழ்ச்சி அடைவோம். பெயர் மாற்றம் என்ற சிறிய செயலுக்கு இது போதுமான மிகப் பெரிய ஈடு இல்லையா!’’ என்று பேரறிஞர் அண்ணா மிகத் தெளிவாக அங்கே சட்டமன்றத்தில் பேசியதும், உரையாற்றியதும் இடம்பெற்றிருக்கிறது என்பதை மட்டும் இந்த நேரத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

நல்ல நூல்களைப் படிக்க வேண்டும்:
அதே நேரத்தில், இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த அரிய வாய்ப்பை நான் பொறுப்பேற்று இருக்கிற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தந்திருக்கிறார்கள். உள்ளபடியே, இந்த நேரத்தில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும், இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொண்டு, இந்த நிகழ்ச்சி இங்கே நடத்துகின்ற வகையில், சிறப்பான ஒத்துழைப்பை தந்த நம்முடைய மாநில கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர், மாணவச் செல்வங்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு மாவட்டத்தினுடைய தலைநகரங்களில் இந்த விழா நடைபெற வேண்டும் என்றும், மாணவர்களைக் கொண்டு பேரணிகளும், அதேபோல புகைப்பட கண்காட்சிகளும் இங்கே கூட வைக்கப்பட்டிருக்கின்றது. அதுபோல இந்த காட்சிகளை நீங்கள் எல்லாம் அவசியம் பார்க்க வேண்டும், இந்த வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும், தெரியாத சூழ்நிலை பற்றி மிக சுருக்கமாக, மிக அழகாக, நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எடுத்துச் சொன்னார்கள்.
பொதுவாக, இன்றைக்கு நம்முடைய மாணவச் செல்வங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுகின்ற வகையிலும், நல்ல நூல்களைப் படிக்க வேண்டும், அந்த வகையில் தான், நம்முடைய முதலமைச்சர், இங்கே முத்தமிழறிஞர் கலைஞர் சென்னையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எழுப்பித் தந்தார்கள். அதேபோல, இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர், கலைஞர் பெயரில், அவருடைய நூற்றாண்டு விழாவில், மதுரையில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இன்றைக்கு ஆங்காங்கே இருக்கக்கூடிய நூலகங்களையும், செய்திகளையும், வரலாறுகளையும் நீங்கள் எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நேரத்தில் உங்களிடம் ஒரு வேண்டுகோளாக வைத்து, நம்முடைய அரசின் சார்பில், முதலமைச்சருடைய கணினித் தமிழ் என்கின்ற வித்தகர் விருதுகள் பெற்றவர்களுக்கும், பரிசுகளைப் பெற்ற மாணவச் செல்வங்களுக்கும், இந்த நேரத்தில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறேன், என்றார்.
சிறப்பு குறும்படம் காட்சி:
அமைச்சர்கள், தமிழ்நாடு நாள் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு நாள் சிறப்பு மலரை வழங்கினர். இன்று நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் தமிழ்நாடு நாள் தொடர்பான சிறப்பு குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
இவ்விழாவில் மாநிலக் கல்லூரி, முதல்வர் முனைவர் இரா. இராமன் அவர்கள் வரவேற்புரையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மரு.இரா. செல்வராஜ் முன்னிலை உரையும், “எழுக தமிழ்நாடு” என்ற தலைப்பில் ஆழி செந்தில்நாதன், “வாழ்க தமிழ்நாடு” என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகம் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், “வளர்க தமிழ்நாடு” என்ற தலைப்பில் சமூக நீதிக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புக் குழுத் தலைவர் சுப. வீரபாண்டியன் ஆகியோர்கருத்துரை ஆற்றினார்கள்.

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் விழாப் பேருரையாற்றி, 2021 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என். எஸ். நாணா என்கிற நாராயணன் -க்கும் 2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது ஏ. ஆரோக்கியதாஸ்-க்கும் வழங்கிச் சிறப்பித்தார். இவ்விருதுகளைப் பெற்ற விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவித்தும் சிறப்புச் செய்தார்.
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பெற்றன. கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தூத்துக்குடி மாவட்டம் ர. கங்காஸ்ரீ என்ற மாணவிக்கு ரூ.50,000/-ம் பாராட்டுச் சான்றிதழும் இரண்டாம் பரிசு பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் இ. அர்ஷியா என்ற மாணவிக்கு ரூ.30,000/- ம் பாராட்டுச் சான்றிதழும் மூன்றாம் பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்டம் ஜே. செபாஸ்டியன் அகல்யா என்ற மாணவிக்கு ரூ.20,000/-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.
மாநிலக் கல்லூரி முதல்வர் இரா.இராமன்:
பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தென்காசி மாவட்டம் க.சிவமுத்துலட்சுமி என்ற மாணவிக்கு ரூ.50,000/-ம் பாராட்டுச் சான்றிதழும் இரண்டாம் பரிசு பெற்ற நீலகிரி மாவட்டம் த. தமிழவன் என்ற மாணவனுக்கு ரூ.30,000/- ம் பாராட்டுச் சான்றிதழும் மூன்றாம் பரிசு பெற்ற தருமபுரி மாவட்டம் மு. கோகிலா என்ற மாணவிக்கு ரூ.20,000/- ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.
மாநிலக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராமன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் நன்றி கூறினார்
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மரு.இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன்,பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், சமூகநீதிக் கண்காணிப்பு (ம)பாதுகாப்புக் குழுத் தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன், ஆழி செந்தில்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாநிலக் கல்லூரியின் பேராசிரியர்கள், மாநிலக் கல்லூரியின் மாணவச் செல்வங்கள், மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

