தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக வின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார் என்று திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சட்டசபையில் வாசிக்க திமுக அரசு எழுதிக் கொடுத்ததை திருத்தி சில விஷயங்களை சேர்த்து படித்தது நாடு முழுவதும் விவாதப் பொருளானது.
இந்நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக மாநில தலைவர் போல செயல்படுகிறார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளிப்படையாகவே விமர்சித்து இருந்தார்.
இப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்று போராட்டங்கள், கண்டன கூட்டங்கள் நடத்தி பலனில்லை என்ற முடிவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் வந்து விட்டன. எனவே, அரசிலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் ஆர்.என்.ரவியை நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடலாம் என்று மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய, முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.
சட்டத்திற்கும், உண்மைக்கும் புறம்பாக பேசிக் கொண்டிருக்கிற ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க பல கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பல மாநில அரசுகள், தங்கள் மாநில ஆளுநரை நீக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றன.
அதுபோல, தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்”.

