சென்னை விமான நிலையத்தில் 1.57 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை கைப்பற்றியது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 24/02/2024 அன்று மும்பைக்குச் செல்வதற்காக ஒரு பயணி அவருடைய கைப்பையை எக்ஸ்ரே மிஷின் மூலம் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்திய பொழுது அந்த பயணியின் கைப்பையின் அடிப்பகுதியில் போலியான இடத்தில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கட்டு கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் அங்கு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் கண்டறிந்தனர். மேலும் இதனை உறுதி செய்வதற்காக கைப்பையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் சாப்பிடுவதற்கு பிஸ்கட்டு மற்றும் அவருடைய துணிகள் மட்டுமே எடுத்துச் செல்வதாக கூறினார் இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அந்த கைப்பையை திறந்து தீவிர பாதுகாப்பு சோதனையை மேற்கொண்டதில் அந்தப் பையின் அடிப்பகுதியில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கட்டுக் கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்தனர்.
மேலும் இந்த பயணியின் கைப்பையில் மொத்தம் 18 கரன்சி நோட்டு கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த 18 கட்டுகளில் 100 மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் கொண்ட 13 கட்டுகளும், 500 மதிப்புள்ள 449 சவுதி ரியால் நோட்டுகள் 05 கட்டுகளிலும் ஆக மொத்தம் 1,30,000 அமெரிக்க டாலர்கள் மற்றும் 2,24,500 சவுதி ரியால்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கரன்சியின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 57 லட்சம்.
சென்னை விமான நிலையத்தின் டி.ஐ.ஜி சி.ஐ.எஸ்.எஃப் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆணையின் பேரில், சுங்க மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சியுடன் பயணியும் விமான நிலைய புலனாய்வு விசாரணை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இது சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தொகையாகும் இதற்காக சி ஐ எஸ் எஃப் சென்னை விமான நிலையத்தின் உயர் அதிகாரிகள், சி ஐ எஸ் எஃப் குற்றவியல் மற்றும் புலனாய்வுப் பிரிவு ஊழியர்களின் விடாமுயற்சி, எச்சரிக்கை செயல்பாடுகள் மற்றும் பணியினை திறம்பட செய்ததற்காக பாராட்டுகளை தெரிவித்தனர்.

