பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் வெளியிட்ட அறிக்கை:
’’ஆவின் 9763 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களையும், பல லட்சம் பால் உற்பத்தி செய்யும் உறுப்பினர்களையும், சுமார் 35,000 பணியாளர்களையும் கொண்ட, மிக பெரிய நிறுவனம்.
பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான, சீரான மற்றும் நியாயமான விலை வழங்குவதையும், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் பொருட்களை வழங்குவதையும், இலக்காக கொண்டுள்ள நிறுவனமாகும்.
ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளாலும் வரி விதிப்புகளாலும், உணவு பொருட்களின் விலை அதிகரித்து, பால் உற்பத்தி செலவு உயர்ந்திருக்கிறது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
பால் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி தர வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். கழக அரசு பொறுப்பேற்றதின் தொடர்ச்சியாக, லிட்டருக்கு 3 ருபாய் உயர்த்தி வழங்கபட்டுள்ளது.
ஆவின் நிர்வாகத்தை பொறுத்த அளவில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரே சீரான விலையை அ னைத்து காலங்களிலும் வழங்கி வருகிறது. இதை, வேறு எந்த நிறுவனங்களும் கடைபிடிப்பதில்லை.
மேலும், கால்நடைகள் வாங்க கடன் உதவி, கால்நடைகளுக்கு காப்பீடு, மருத்துவ உதவிகள், மற்றும் இனசேர்க்கை போன்ற திட்டங்களும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பால் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை, பங்கு ஈவுத்தொகை போன்றவற்றையும் வழங்கி வருகிறோம்.
பால் விற்பனையை பொறுத்தவரையில் வேறு எந்த நிறுவனங்களையும் விட மிக தரமானதாகவும், விலை குறைந்ததாகவும், பொது மக்களுக்கு ஆவின் வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமென, முதல்வரின் உத்தரவின் படி பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது.
குறிப்பாக, நிர்வாகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள், கணிணிமயமாக்கல் மற்றும் தானியங்கி இயந்திரமயமாக்கல், புதிய பால் பொருட்கள் உற்பத்தி முறையான சந்தைப்படுத்துதல், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைகளின் நலத்தை பேணுதல், பால் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கைகள், மற்றும் தர மேலாண்மை போன்றவற்றில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய நேரத்தில் அவர்களின் கோரிக்கைகள் ஏற்று கொள்ளும் விதமாக உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.
வெகுவிரைவில், சீரான பால்கொள்முதல் , பால் பதப்படுத்துதல்,பால் பொருட்கள் தயாரித்தல், விற்பனையை முறைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம், முன்னேற்றம் ஏற்படும். வேறு நிறுவனங்கள் எதையும் கண்டு யாரும் அச்சப்படவில்லை.
ஆனால், பொதுவாக ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் இன்னொரு மாநிலத்தின் பால் உற்பத்தி நிறுவனம் தலையியிடுவதில்லை. எனவேதான், முதல்வர், ஒன்றிய அரசுக்கு தமிழகத்தின் பால் உற்பத்தி பகுதியில் வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என கடிதம் எழுதினார்.
அதே நேரத்தில் தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைகளின் நலனை பேணவும், பால் கையாளும் திறனை அதிகரிக்கவும் உரிய அறிவுரைகளை தந்துள்ளார்கள். அவற்றை தீவிரமாக நடைமுறைப் படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
எனவே, எந்த விதத்திலும் பால் உற்பத்தியாளர்கள் நலன் மற்றும் ஆவின் வாடிக்கையாளர்களான பொதுமக்களின் நலன் என இரண்டிலும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இந்த அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் யாரும் எந்த சலசலப்புக்கும் அஞ்சவேண்டாம்.
ஆவின் நிறுவனம் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு வழங்குவதற்கும் அவர்கள் நலனை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

