“தகைசால் தமிழர்” விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் முனைவர். கி. வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது இந்த விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021 – ஆம் ஆண்டில் இருந்து தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
தகைசால் தமிழர் கி.வீரமணி:
அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு’ ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருகிறார்.
உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist – (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும்,திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
“தகைசால் தமிழர்”விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்டமுனைவர். கி. வீரமணி அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவரும் விடுதலை ஏட்டின் ஆசிரியருமான கி.வீரமணி “தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

