தமிழர்கள் மனதில் நீங்காத ஆட்சி புரிந்து வரும் “தமிழ்” (மொழி) அரசி பல சிற்றூர்களை கொண்டு ஆண்டு வரும் நாட்டிற்கு சி. என்.அண்ணாதுரை அவர்களால் 1967 ஆம் ஆண்டு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டப்பட்ட நாள் இன்றைய நாள்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக தமிழ் (மொழி) அரசி உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களும் தனிச் சிறப்புகள் கொண்டுள்ளது.
அரியலூர்:
உலக பாரம்பரிய தளம் என்று போற்றப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தை கொண்ட ஊர் அரியலூர் என்று சொல்வதே அது அரியலூர்க்கான பெருமை தானே.
செங்கல்பட்டு:
பாரம்பரியம் என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது மட்பாண்டங்கள் அல்லவா. அப்படிப்பட்ட பாரம்பரியத்திற்கு (மட்பாண்டங்கள்) பெயர்போன மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம்.
சென்னை:
எந்த ஊர்காரரையும் தனது சொந்த ஊர்காரராக மாற்றும் குணம் நம் சிங்கார சென்னைக்கு உண்டு என்று சொன்னால் யாரால் மறுக்க முடியும்?…… வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பட்டத்தை தமிழ்நாட்டுக்கு அடுத்து பெற்றது நம் சென்னை தான் – “வந்தாரை வாழவைக்கும் சென்னை”. இங்குள்ள கடற்கரைகள், உழவர் சிலை, எப்பொழுதுமே பரபரப்பாக காட்சியளிக்கும் சாலைகள், இவையனைத்தும் சென்னைக்குறிய அடையாளம் தானே.
கோயம்புத்தூர்:
அழகிய கொங்குதமிழுக்கு சொந்தக்காரி கோயம்புத்தூர். ஈஷா கோவிலே கோயம்புத்தூர்க்கு அழகு தான். சைவப் பிரியர்களுக்கு அரிசி பருப்பு சாதமும், அசைவ பிரியர்களுக்கு கொங்குநாடு பிரியாணியும் இங்கு தனிசிறப்புடையவை.
கடலூர்:
நூற்றாண்டு வயதான கலங்கரை விளக்கம் கொண்ட வெள்ளி கடற்கரை அமைந்துள்ள இடம் கடலூர். கடலூரில் மிகவும் பிரபலமான உணவு மீன் குழம்பு.
தர்மபுரி:
மாம்பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யக்கூடிய மாவட்டம் தர்மபுரி மாவட்டம்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் என்று சொன்னதும் சட்டென்று நம் நினைவிற்கு வருவது தலப்பாகட்டி பிரியாணியும், திண்டுக்கல் பூட்டும் தான். திண்டுக்கல்லுக்கு ‘பிரியாணி நகரம்’ என்ற பெயரும் உண்டு.
ஈரோடு:
மஞ்சள் தன் தனிச்சிறப்பு பெற்ற ஊர் ஈரோடு. ஈரோடு மஞ்சளில் குர்குமின் அதிக அளவில் இயற்கை மஞ்சளை இங்கு காணமுடியும்.
கள்ளக்குறிச்சி:
தமிழர்களின் முதன்மை தொழிலான விவசாயத்தின் நகரம் என்றழைக்கப்படுவது கள்ளக்குறிச்சி மாவட்டம். பசுமையும் இயற்கையும் வசிக்கும் ஊர் என்றே கூறலாம்.
காஞ்சிபுரம்:
கோவில்களுக்கும் பட்டுபுடவைக்கும் பெயர் கொடுத்த ஊர் காஞ்சிபுரம். புடவைகளிலே மிகச் சிறப்பானது பட்டுப்புடவை. பட்டுப்புடவையை சிறப்பாக்கியது நம் காஞ்சிபுரம். காஞ்சிபுரத்திற்கு ஆயிரம் கோவில்களின் நகரம் என்ற பெயரும் உண்டு.
கரூர்:
கைத்தறி துணிகளும் போர்வைகளும் தான் கரூரின் சிறப்பம்சமே!…. காவிரி நதியும், அமராவதி நதியும் இருப்பதாலே, இங்கு சத்தான மண் வளமும், கொழுப்பான பூமியும் காணப்படும்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியின் மாம்பழத்திற்கு தனிச்சிறப்பு உண்டு என்பார்கள். கிருஷ்ணகிரியில் ஒரு ஆண்டிற்கு சுமார் மூன்று லட்சம் மாம்பழங்களை உற்பத்தி செய்கின்றனர். கிருஷ்ணகிரியை “இந்தியாவின் மாம்பழத் தலைநகர்” என்றும் கூறுவர்.
மதுரை:
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை நம் தமிழ்நாட்டின் பெருமை என்றே கூறலாம். எத்தனை மலர்கள் இருந்தாலும் மதுரை மல்லிகை போல் வருமா!….. மதுரை மாநகருக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் உண்டு. இப்பொழுது கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை மாநகரையே அழகு படுத்திக்கொண்டு இருக்கிறது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் ஒரு யாத்திரை தலமாகும். மயிலாடுதுறைக்கு மயுராபுரம் என்றும் மாயவரம் என்ற பெயரும் உண்டு.
நாகப்பட்டினம்:
துறைமுக நகரங்களில் நாகப்பட்டினமும் ஒன்று. நாகப்பட்டினத்தை நாவல் பட்டினம் என்றும் கப்பல்களின் நகரம் என்றும் கூறுவர்.
கன்னியாகுமரி:
நாற்புறமும் நீரால் சூழப்பட்ட தீவுக்குள் கம்பீரமாக நிற்கும் திருவள்ளுவரின் சிலையை கன்னியாகுமரியில் காணலாம். சூரியன் உதிப்பதையும் மறைவதையும் கன்னியாகுமரியில் கண்டு களிக்கலாம்.
நாமக்கல்:
கோழிப்பண்ணை நகரம் என்றழைக்கப்படும் ஊர் நாமக்கல். முட்டைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நகரமும் நாமக்கல் தான்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் மிகச் சிறப்பானது சர்க்கரை ஆலைகள் தான். திருச்சிராப்பள்ளியில் இருந்த பிரிந்த மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதுகை என்ற பெயர் உண்டு. கால்வாய்களும் காவற்க்கோட்டைகளும் இங்கு சிறப்பானவை. இங்கு தான் சித்தன்னவாசல் அமைந்துள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ராம்நாத் எனவும் முகவை எனவும் பெயர் உண்டு. இங்கு தான் ராமேஸ்வரம், பாம்பன் பாலம் உள்ளது.
ராணிப்பேட்டை:
ராஜா ராணி கோட்டைகளும், கோவில்களும் தான் ராணிப்பேட்டையின் பெருமை. இங்கு கான்சனகிரி மலையில் அதிசய மணியோசை எழுப்பக்கூடிய பாறை உள்ளது வியக்கத்தக்கது.
சேலம்:
சேலத்திற்கு பெருமையே மாம்பழம் தான். இங்கு ஜவுளி தொழில்கள் மிகவும் சிறப்பானது.
சிவகங்கை:
சிவகங்கை ஊருக்கு நடுவில் சிவகங்கை கோட்டை அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள சிவகங்கை மாளிகையை கட்டியது சிவகங்கை ஆட்சியை ஆண்ட சசிவர்ன தேவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி:
குளு குளு குற்றாலம், காசி விஸ்வநாதர் கோவிலும் அழகு படுத்தும் ஊர் தென்காசிப்பட்டினம் தானே.
தஞ்சாவூர்:
அனைவரும் கண்டு வியக்கும் சோழர்களின் பெருமையான ராஜா ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை சொந்தமாக்கிய ஊர் தஞ்சாவூர். தஞ்சாவூரை “தமிழகத்தின் அரிசி கிண்ணம்” என்று அழைப்பர். தஞ்சாவூரையும் தலையாட்டி பொம்மையும் மறக்கமுடியுமா!….
தேனீ:
தேனீயை காற்று வசிக்கும் பூமி என்றும் பசுமை நிறைந்த பூமி என்றும் கூறலாம். இங்கு பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தின் மிகவும் பெருமைக்குரியது திருத்தணி முருகன் கோவிலும், வீரராகவர் கோவிலும் தான். இங்குள்ள வீரராகவர் கோவிலில் தெய்வம் விஷ்ணு பள்ளிகொண்ட முறையில் காட்சியளிப்பாராம்!…
திருவாரூர்:
தென்னிந்தியாவின் தானியக் களஞ்சியம் என்று கூறப்படுவது திருவாரூர் மாவட்டம். “தேர்” என்றாலே திருவாரூர் தேர் தான் என்பார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியை முத்து நகரம் என்றும் அழைப்பார்கள். தூத்துக்குடியில் மிகப் பிரபலமானது தூத்துக்குடி மாக்ரூனிகள். கழுகுமலை, திருச்செந்தூர் முருகன் கோவில் எனப் பல இடங்களை காணலாம்.
திருச்சிராப்பள்ளி:
2000 ஆண்டுகள் பழமையான கல்லணை அணையை கொண்டுள்ள ஊர் திருச்சிராப்பள்ளி. திருச்சியின் மிக முக்கியமான அடையாளம் பாறை கோட்டை தான்.
திருநெல்வேலி:
திருநெல்வேலி அல்வா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இனிப்புக்கு மிகவும் பெயர் போனது திருநெல்வேலி அல்வா. அதுமட்டுமல்லாமல் வாழைப்பழமும் இங்கு பிரபலம் தான்.
திருப்பத்தூர்:
ஆசியாவிலேயே இரண்டாவது சந்தனக்கட்டை கிடங்கு உள்ள இடம் என்ற பெருமையை பெற்றது திருப்பத்தூர். இங்கு ‘ஆம்பூர் பிரியாணி’ பிரபலமான உணவு.
திருப்பூர்:
பட்டு என்றாலே திருப்பூர் தான். இந்தியாவின் பின்னலாடை தலைநகர் என்ற பெயரைக் கொண்டுள்ளது.
திருவண்ணாமலை:
ஒவ்வொரு பௌர்ணமியும் மக்கள் திரண்டு கொண்டு கிரிவலமாக செல்லும் திருவண்ணாமலையை அறியாதவர் எவரேனும் உண்டோ?. லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு மகா தீபம் அன்று மலை மீது ஏற்றப்படும் தீபத்தை காணச் செல்வார்கள்.
நீலகிரி:
12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் பூக்குமிடமான நீல மலையை தான் நீலகிரி என்றழைக்குறோம். மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான ஊட்டி இங்கு தான் உள்ளது.
வேலூர்:
செஞ்சி கோட்டை போலவே வேலூர் கோட்டையும் மிகவும் பெருமைக்குரியது. இந்தியாவின் தோல் மையம் என்றழைக்கப்படும் ஊர் வேலூர்.
விழுப்புரம்:
விழுப்புரத்திற்கு அடையாளம் என்று கேட்டால் முதலில் நினைவிற்கு வருவது செஞ்சி கோட்டை தான். மரக்காணம் கடற்கரை, மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில், சிங்கவரம் கோவில் என கண்டு மகிழ பல இடங்கள் உள்ளன.
விருதுநகர்:
தீபாவளி வந்தாலே எங்கு பார்த்தாலும் பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்வார்கள். அந்த மகிழ்ச்சியை கொடுக்கும் பட்டாசுகள் உற்பத்தியாகும் இடமான சிவகாசி விருதுநகரில் தான் உள்ளது.
இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளையும் பெருமையும் கொண்டுள்ள நம் தாய் தமிழ்நாட்டின் 56 வது பிறந்தநாளில் “தமிழை” போற்றுவோம்.
– கோ. தீபா புவனேஸ்வரி

