பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுக்குச் சென்று பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.
ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் , காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினார்.
ரயில்களில் பயணம் செய்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாபெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமான உயிர் இழப்புகள் குறித்துப் பேசுகையில், காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது என்றார் அவர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரைவான விசாரணையை உறுதி செய்யவும், தவறு இழைத்ததாக கண்டறியப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவு முழுவதும் தொடர்ந்து மீட்பு பணிகளில் உதவுவதற்காக உழைத்ததை அவர் பாராட்டினார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ரத்ததானம் செய்ய வந்த ஏராளமான உள்ளூர் மக்களையும் அவர் பாராட்டினார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடரவும், ரயில் பாதைகளை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்யவும் ரயில்வே செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படைகளின் பணியாளர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் உரையாடிய பிரதமர், சோகத்தைத் தணிக்க அரசு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,
“ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தினால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். துயரமான இந்த தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் இருக்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து(PMNRF) நிவாரண உதவி தொகையை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து(PMNRF) 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

