“ஆவின் நிறுவனத்தில் ரூ.300 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறைக்கு செல்வது எப்போது? ’’ என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில் சு.ஆ.பொன்னுசாமி மேலும் கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் பணியாற்றும் அலுவலர்களானாலும் சரி, பால்வளத்துறை என அழைக்கப்படும் பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையில் பணியாற்றும் அலுவலர்களானாலும் சரி அதில் பெரும்பாலானவர்கள் ஆட்சிகள் மாறினாலும், அமைச்சர்கள் மாறினாலும் எது குறித்தும் அச்சப்படுவதில்லை. காரணம் வருமானத்திற்கு அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற தீய எண்ணத்தோடு மட்டுமே செயல்பட்டு வரும் அவர்களுக்கு மேலிடத்தின் அன்பும், ஆதரவும் இருப்பதால் தாங்கள் செல்வது குறுக்கு வழியா..? நேர்வழியா..? என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. அதற்காக கவலைப்படுவதும் இல்லை.
ஊழல் பேர்வழிகள் தங்களின் கஜானா நிரப்பிட, தங்க முட்டை போடும் வாத்தாக திகழும் ஆவினின் அடி வயிற்றை கிழித்தெடுக்க அவர்கள் எந்த எல்லை வரையிலும் செல்வார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்களை ஆதாரபூர்வமாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அரசின் கவனத்திற்கு தொடர்ந்து எடுத்து வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் வேறு வழியின்றி அதனை ஊடகங்கள் வாயிலாக வெளிச்சம் போட்டுக் காட்டி வந்திருக்கிறது.
ஆனால் அப்படி செய்தும் கூட கடந்த அதிமுக ஆட்சியிலும் சரி, தற்போதைய திமுக ஆட்சியிலும் சரி ஊழல் அதிகாரிகள் மீதான அரசின் நடவடிக்கை என்பது வெறும் பூஜ்யமாகவே இருக்கிறது. காரணம் அவர்கள் சம்பாதிக்கும் ஊழல் பணமானது கீழ்மட்டத்தில் தொடங்கி, மேல்மட்டம் வரை சர்வசாதாரணமாக பங்கிடப்படுவதால் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவோர் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றனர். முறைகேடுகள் செய்வோருக்கு பணியிட மாறுதல் மட்டுமே தண்டனை என்பதாலும், ஒருவேளை பணியிடை நீக்கம் செய்வதாக இருந்தாலும் அது பணி ஓய்வு பெறும் நாளில் தான் இருக்கும் என்பதாலும் தவறிழைப்போர் கூடுதல் தைரியத்துடன் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2020-2021 ஆம் நிதியாண்டில் மட்டும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பால் கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் பாலே கொள்முதல் செய்யாமல் கொள்முதல் செய்தது போல போலி கணக்கு காட்டி சுமார் 83லட்சம் ரூபாய் வரை முறைகேடுகள் செய்தது பால் கூட்டுறவுகளின் தணிக்கை இயக்ககத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தகவலும், அதுகுறித்த விசாரணை அறிக்கையும் தற்போது வெளிவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதனால் தான் இது போன்ற எண்ணற்ற அதிர்ச்சிகரமான ஊழல், முறைகேடுகள் குறித்த விபரங்கள் பால் கூட்டுறவுகளின் தணிக்கை இயக்ககத்தின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளில் (Audit Report) “கடுங்குறைகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கடந்த 15 ஆண்டுகளில் “கடுங்குறைகள்” என தெரிவிக்கப்பட்டு, அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அப்படியே ஆவினில் புதைந்து போய் கிடப்பதால் அதன் விபரங்களை மீண்டும் தோண்டி எடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாலே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆவினுக்கு இழப்பு ஏற்படுத்தியிருப்பதை அறியவும், அதனை மீட்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்.
மேலும் கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது மதுரை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தற்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் “ஆவினில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதனை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திமுக ஆட்சி அமைந்ததும் அது தொடர்பாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்; ஆவினில் நடைபெற்ற ஊழல் – முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் ஒருவர் கூட தப்பிக்க முடியாது; முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி என வாக்குறுதி அளித்தார்.
ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்றாவது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில் கூட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் பெயரால் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கடந்த 2011-2021 பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் போது ஆவினில் நடைபெற்ற ஒரு முறைகேடு தொடர்பாக கூட தற்போது வரை வழக்குப்பதிவு செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ உத்தரவிடப்படவில்லை என்பதும், அதிமுக ஆட்சியையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு தற்போதைய திமுக ஆட்சியில் ஆவினில் ஊழல், முறைகேடுகள் பலமடங்கு அதிகரித்து புற்றுநோய் போல பரவி தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினையே ஒட்டுமொத்தமாக அழித்து விடும் சூழலுக்கு தள்ளியுள்ளது கவலைக்குரியதும், வேதனைக்குரிய விசயமுமாகும்.
எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை மற்றும் ஆவின் மீது சிறப்பு தனிக்கவனம் செலுத்தி பால் கூட்டுறவுகளின் தணிக்கை இயக்ககத்தால் கடந்த 15 ஆண்டுகளில் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கையில் (Audit Report) “கடுங்குறைகள்” என தெரிவிக்கப்பட்ட விபரங்களை பெற்று அதில் தொடர்புடைய அதிகாரிகள், பணியாளர்கள், அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சாட்டையை சுழற்றினால் ஒழிய ஆவின் நிர்வாகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

