கர்நாடக சட்டசபை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது. முதலமைச்சராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க மூத்த காங்கிரஸ் தலைவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்கிறார்கள்.
இது குறித்த அறிவிப்பில், கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்தலுக்கான பார்வையாளர்களாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, கட்சியின் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் மற்றும் மூத்த தலைவர் தீபக் பபாரியா ஆகியோரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நியமித்துள்ளதாக பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் மே 14 அன்று தெரிவித்தார்.
இவர்கள், முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை விவாதித்தனர். ஏற்கனவே, முதலமைச்சர் பதவி வகித்த போது முழுமையாக தனது பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவர் சித்தராமையா. 13 பட்ஜெகளை தாக்கல் செய்த பெருமைக்குரியவர். அவருக்கு பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்கள ஆதரவு உள்ளது.
பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தீவிரமாக தேர்தல் களமாடியவர் மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார். ஆளும்கட்சிக்கு எதிராக போராட்டங்களை அடுக்கடுக்காக நடத்திக் காட்டியவர். ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரையை கர்நாடகாவில் வெற்றிகரமாக நடத்தியவர். அவரை முதலமைச்சர் வேட்பாளர் என்றே அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே பேசி வந்தனர். இப்போது, காங்கிரஸ் எதிர்பார்த்தபடியே வெற்றி பெற்று விட்டது.
எனவே இப்போது, சட்டசபை காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதில் கடுமையான போட்டி நிலவுகிறது. இது, இயல்பானது என்றாலும் டெல்லி காங்கிரஸ் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. அனைத்து கோஷ்டிகளையும் அரவணைத்து செல்லும் வகையிலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்று மூத்த நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்கும் திட்டமும்.உள்ளது.
அதுபோல, சீனியர்களுக்கு முக்கிய இலாகாக்களை ஒதுக்குவது என்றும் பேச்சுவார்த்தை நடக்கிறது. முதலமைச்சர் பதவி சிவக்குமாருக்கா.. அல்லது சித்தராமையா-வுக்கா என்பதுதான் இப்போது கர்நாடகா காாங்கிரஸில் புயலைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. அடுத்த முதலமைச்சர் யார்..? என்று கர்நாடகா மக்களைப் போல் நாமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு சீக்கிரம், காாங்கிரஸ் அறிவித்துவிடுமா என்ன..?

