’’மாலத்தீவு இழுவைக் கப்பல் மோதி, படகு விபத்துக்குள்ளான கன்னியாகுமரி மீனவர்களுக்கு மாலத்தீவு நிறுவனத்திடம் இருந்து நஷ்ட ஈடு பெற்று தர மத்திய மந்திரி ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்’’ என்று குமரி எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கன்னியாகுமரி நாடாளுமன்றத்தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் வெளியிட்ட அறிக்கை:
குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 12 மீனவர்கள் கடந்த 11-ந்தேதியன்று மாலத்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்நாட்டின் இழுவை கப்பல் மீனவர்களின் படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் படகு மற்றும் அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கடலில் முழ்கின. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.
அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்தது. பின்னர் அவர்களை விடுவிக்க இந்திய தூதரகத்தை நான் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டேன். மீனவர்கள் தாயகம் திரும்பி வரவும் நடவடிக்கை எடுத்தேன். பின்னர், ஊர் திரும்பிய மீனவர்களை சந்தித்து அவர்கள் கோரிகை் கையை கேட்டறிந்தேன். அப்போது சேதம் அடைந்த படகு உள்பட ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்று தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து நான், டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தேன். அப்போது, மாலத்தீவு கப்பல் மோதி படகு விபத்துக்குள்ளான மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனு அளித்தேன். இதுதொடர்பாக மாலத்தீவு அரசை தொடர்பு கொண்டு நிறுவனத்திடம் இருந்து நஷ்ட ஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு விஜய் வசந்த் எம்.பி. கூறியுள்ளார்.

