நமக்கு பிடித்ததையும் தேவையானதையும் நாமே செய்துகொள்வதில் எத்துனை சந்தோஷம் உள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் அடிப்படையான தேவையுள் ஒன்று தான் உணவு. அப்படியிருக்க நாம் உட்கொள்ளும் உணவு ஆரோக்கியமானதா என்று கவனிக்கிறோமா?.
கிராமத்தில் வாழ்பவர்கள் நகரத்தில் வாழ்பவர்களை விட பல மடங்கு பலம் வாய்ந்தவர்களாக உள்ளார்கள். காரணம் கடின உடல் உழைப்பும் ஆரோக்கியமான உணவும் தான். கிராமவாசிகள் அன்றாட தேவைக்கான காய்கறிகள், பழங்கள், கீரைகள் என அனைத்தையும் அவரவர்களே விளைவித்து எப்பொழுது தேவையோ அப்பொழுது பறித்து ஆரோக்கியமாக சாப்பிடுவார்கள்.
நகரத்தில் வாழ்பவர்களுக்கு செடிகள், மரங்கள் நடுவதற்கு போதுமான இடமும் நேரமும் இல்லாததால் கடைக்கு சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் சேகரித்து சத்தற்ற உணவை சாப்பிட்டு ஆரோக்கியமற்ற வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அனைவரும் தங்களது மாடியிலோ அல்லது பால்கனியிலோ நாம் அதிகமாக உட்கொள்ளும் காய்கறிகள், பழங்களின் விதைகளை சிறிய மண் தொட்டியில் விதைத்தால் நமக்கு தேவையான உணவை நாமே ஆரோக்கிய முறையில் உற்பத்தி செய்து சாப்பிட்டோம் என்ற சந்தோஷத்திற்கு எல்லை உண்டோ!….
சமீபகாலமாக தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலையுயர்வை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தை மாடித் தோட்டத்தில் செலவழித்தால் காய்கறிகள் விலையுயர்வு கவலையும் தீரும் ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்கும் அல்லவா.
தக்காளி, வெங்காயம், அவரை, வெண்டைக்காய், கத்திரிக்காய், மிளகாய், கீரைகள் என எத்தனையோ வகையான உணவுப் பொருட்களை எளிய முறையிலேயே நாம் விளைவிக்கலாம். சென்னையில் 83 சதவீதம் மக்கள் மாடித் தோட்டத்தில் ஆர்வம் காட்டுவதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
பரபரப்பாக ஓடிக்கொண்டு வசதியான வாழ்கையை தம் பிள்ளைகளுக்கு தேடிக்கொடுப்பதில் கவனம் செலுத்துபவார்கள், மாடித் தோட்டம் என்னும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வருங்கால சமுதாயத்திற்கு கொடுப்பதில் சிறிதேனும் கவனம் செலுத்தலாமே!…
– கோ. தீபா புவனேஸ்வரி

