’’வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது’’ என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் என்னென்ன பணிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டவுடன், முடிவு செய்யப்பட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும், மழை பெய்வதற்கு முன்பதாக அனைத்து பணிகளையும் தொடங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த வருடம் ஒதுக்கப்பட்ட தொகையில் 5 சதவீதம் தவிர, மற்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.
சென்னைக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அனைத்து சாலைகளும் முழுமையாக போடப்பட்டுள்ளது. மழைக்காலங்களை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகள் மாவட்டங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக கிட்டத்தட்ட ரூ.2000 கோடியினை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்தார். இவற்றில் முதற்கட்டமாக 5000 சாலைப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நிவாரண மையங்கள் மற்றும் மையங்களில் தங்குபவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை தயார்நிலையில் உள்ளது.
வடகிழக்குப் பருவமழை
மழையின் காரணமாக விழும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் வகையில் மர அறுவை இயந்திரங்கள், மழைநீர் தேங்கினால் அவற்றை அகற்றும் வகையில் 700 க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் ஆகியவை தயார்நிலையில் உள்ளது. நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டு மழைநீர் எளிதில் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையிலும், பொதுமக்களும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, ‘’சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து மாதவரம் பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் சரக்குந்து முனையத்திற்கு ரூ.30.30 கோடிக்கான காசோலையும் மற்றும் அதேபேல் சென்னையில் சிறுசிறு தெருக்களில் இருக்கின்ற குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கு மிகுந்த பயனுள்ள இயந்திரமான பாப்கேட் என்று சொல்லக்கூடிய இயந்திரத்தை வாங்குவதற்காக ரூ.12.75 கோடி மதிப்பீட்டில் 51 பாப்கேட் ஸ்கிட் ஸ்டீர் லோடர்கள் (51 Bobcat Skid Steer Loaders) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து மொத்தம் ரூ.43.05 கோடிக்கான காசோலைகள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது’’ என்றார்.

