Home செய்திகள் ’’நீருக்கடியில் இயங்கும் ரோபோ அமைப்புகளின் கண்காட்சி..!’’

’’நீருக்கடியில் இயங்கும் ரோபோ அமைப்புகளின் கண்காட்சி..!’’

0
’’நீருக்கடியில் இயங்கும் ரோபோ அமைப்புகளின் கண்காட்சி..!’’

தேசிய கடல்வள தொழில்நுட்பக் கழகத்தில் நீருக்கடியிலான ரோபோட்டிக்ஸ் தேசிய பயிலரங்கில் நீருக்கடியில் இயங்கும் ரோபோ அமைப்புகளின் கண்காட்சி, செயல்விளக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

அது பற்றிய விபரம் வருமாறு:

சென்னையிலுள்ள தேசிய கடல்வள தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐஓடி), தேசிய அளவிலான நீருக்கடியிலான ரோபோட்டிக்ஸ் பயிலரங்கு ஜூன் 1 ஆம் தேதி, தொடங்கி ஜூன் 02-ம் தேதிவரை நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது கடல்சார் தானியங்கி ரோபோடிக்ஸ் அமைப்புகளுக்கான மையத்தை), தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா, ஆழ்கடல் இயக்கத்தின் திட்ட இயக்குனர் டாக்டர் எம் வி ரமண மூர்த்தி ஆகியோர் என்ஐஓடி இயக்குனர் டாக்டர் பாலாஜி ராமகிருஷ்ணன் முன்னிலையில் திறந்து வைத்தனர். இந்த மையம் கடல்சார் தானியங்கி, ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான ஒரு பிரத்யேக மையமாக செயல்படும்.

நிகழ்ச்சியில் பேசிய தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா, கடல்வளம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், உத்திசார் பாதுகாப்பிலும் மிக முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்தார். மேலும் பூமியின் மேற்பரப்பில் 70%-க்கும் அதிகமான பகுதியை பெருங்கடல்கள் உள்ளடக்கியுள்ளன. அவை உயிர்களை நிலைநிறுத்துவதிலும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும் தெரிவித்தார். கடல் ஆய்வு, கடல் வள வரைபடமாக்கலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்தியா கடல் கண்காணிப்பு, ஆழ்கடல் ஆய்வு, போக்குவரத்து, கண்காணிப்பு, வள மதிப்பீடு மற்றும் நிலையான நீலப் பொருளாதார முயற்சிகள் போன்ற பயன்பாடுகளுக்காக உள்நாட்டு நீருக்கடியில் உள்ள தொழில்நுட்பங்களை தீவிரமாக மேம்படுத்தி வருகிறது என்றும் கடல்சார் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அது நாட்டின் பாதுகாப்புக்கு உறுதுணையாக விளங்கும் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய என்ஐஓடி இயக்குநர் டாக்டர் பாலாஜி ராமகிருஷ்ணன், கடல்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் நீருக்கடியில் இயங்கும் ரோபோட்டிக்ஸ் துறையில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், மாணவர்கள், துறைசார் வல்லுநர்களை இந்தப் பயிலரங்கம் ஒருங்கிணைக்கிறது என்றும் இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 300 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில்துறையினர் இந்த நீருக்கடியிலான ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி கடல்நீருக்கடியில் கனிம வளங்களைக் கண்டுபிடித்தல் போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர் என்றார். குறிப்பாக தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கடலுக்கடியில் உள்ள தொல்லியல் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதாகவும் அதற்கு நீருக்கடியிலான ஆளில்லா நீர்மூழ்கிகள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த இருபது ஆண்டுகளாக, புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆதரவின் கீழ், அதிநவீன நீருக்கடியில் இயங்கும் அமைப்புகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்குவதில் என்ஐஓடி முன்னணியில் இருந்து வருகிறது. நீருக்கடியில் இயங்கும் ரோபோட்டிக்ஸ், தானியங்கி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், உருவாகிவரும் சவால்கள், ஆராய்ச்சி வாய்ப்புகள், உள்கட்டமைப்புத் தேவைகள், ஒருங்கிணைந்து மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்தும் விவாதிப்பதற்கான ஒரு தேசிய தளமாக இந்தப் பயிலரங்கம் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பயிலரங்கில் இடம்பெற்றவை:

 * முழு அமர்வுகள் மற்றும் அழைப்புரைகள்

* வல்லுநர்களின் தொழில்நுட்ப விரிவுரைகள்

  • நீருக்கடியில் இயங்கும் ரோபோ அமைப்புகளின் கண்காட்சி, செயல்விளக்கங்கள்
  • மாணவர்களின் சுவரொட்டி விளக்கக்காட்சிகள்
  • போட்டிகள் வட்டமேசை விவாதங்கள்
  • தொழில்நுட்பக் கண்காட்சிகள், களப் பயணங்கள்

இந்த நிகழ்வானது, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறைகள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு முகமைகள் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்பை அதிகரித்துள்ளதோடு, கடல்சார் தொழில்நுட்ப மேம்பாட்டில் புத்தாக்கத்தையும் திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here