பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரான ஜே.எஸ்.கே, தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘குற்றம் கடிதல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘மதயானைக் கூட்டம்’, ‘தரமணி’, ‘புரியாத புதிர்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘அண்டாவ காணோம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். அவர் எழுதி இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஃபயர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் மற்றும் காயத்ரி ஷான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் விறுவிறுப்பான திரில்லர் என்கிறது படக்குழு.

பெண்களின் விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ஃபயர்’ திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த ஜே.எஸ்.கே, “இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசுகிறது. தொடர்ந்து தவறான செயல்களில் தெரிந்தே ஈடுபடும் ஆண்கள் இந்த சமுதாயத்தில் சகஜமாக நடமாடும் நிலையில், பெண்கள் தெரியாமல் தவறு செய்தாலும் அவர்களை நமது சமூகம் வேறு மாதிரி பார்க்கிறது. இந்த சமூக பார்வை மாறினால் மட்டுமே நல்ல சமுதாயம் உருவாகும். ஏனென்றால் இவ்வாறு இருப்பது இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் நல்லதல்ல எனும் கருத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டு செல்லும்” என்று உறுதியுடன் கூறினார்.

தனது ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் ஃபயர் திரைப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு டி.கே (அறிமுகம்) இசையமைக்க, சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.கே.ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை சி.எஸ்.பிரேம் குமாரும் கலை இயக்கத்தை சுரேஷ் கல்லேரியும் கவனிக்க, பாடல்வரிகளை மதுர கவியும், ராவும் எழுதுகின்றனர். உடைகள் வடிவமைப்பை டினா ரோசாரியோ கவனிக்கிறார்.

பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரான ஜே.எஸ்.கே, தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘குற்றம் கடிதல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘மதயானைக் கூட்டம்’, ‘தரமணி’, ‘புரியாத புதிர்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘அண்டாவ காணோம்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் என்ற பெருமையோடு இப்போது திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார். அனைத்து துறைகளிலும் ஆற்றல் பெற்ற அவரின், இயக்குநர் அவதாரத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் கோடம்பாக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

